தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

யூமா வாசுகி கவிதைகள்

யூமா வாசுகி
யாத்ரா yathra  -  28 Oct 2010  -



--------------------------------------------------------------------------------------------------------
-----------

யாத்ரா yathra  -  28 Oct 2010  -

என் சன்னல்கள்

என் சன்னல்களைத் திறந்தேன்
உன் முகம் கலைந்து பல்லாயிரம்
ஈசல்களாகப் பறக்கிறது
வெளிச்ச ஈர்ப்பிற்கு சன்னல்களுக்குள் நுழைபவை
என் ஓவியத்தாளின் வர்ண ஈரத்தில்
படிந்து புரள்கின்றன
அவற்றைத் தூரிகை முனையால் அகற்றுகிறேன்
விரலால் தடவி அப்புறப்படுத்துகிறேன்
காற்றூதித் துரத்துகிறேன்
இடையறாது காகிதத்தில்
ஈசல்கள் ஊர்கின்றன
நான் வரைய உத்தேசித்த்து என்னை மீறுகிறது
ஈசல்களும் நானும் சேர்ந்து வரைகிற ஓவியம்
எவ்விதம் பூர்த்தியாகும் என்று தெரியாது
எப்படியானாலும் நான்
சன்னல்களைச் சாத்தமாட்டேன்

-----------------------------------------------------------------------------------------------------------
சக்தி வழிபாடு

மயிற்பீலியின் மேற்பகுதி ஆரம் தகதகத்தமைந்த நெற்றியில்
புரண்டு முன்கேசம் எழுதுவதற்கடியில்
இன்றியமையா வரிகளில் இதுவரையிலுமிட்ட
அடிக்கோடுகள் அத்தனையும்
நிரந்தரமாகப் படுத்திருக்கின்றன நீளப்புருவங்களாக.
கருமணிகளின் சறுக்கு விளையாட்டில்
விழிக்கு வெளியேயும் சிதறும் பனிச்சில்லுகள்.
மூடித்திறக்கும் இமைத்தொழிலால் கட்டுண்ட ஒளி
விபத்தற்ற போக்குவரத்தை வீதிக்குத் தருகிறது.
ஓருலகக் காற்று தனக்குச்சொந்தமான ஒரே வீட்டிற்கு
ஓய்வெடுத்து ஓழுங்கமைய
சன்னச் சுவாசமாய் இடையறாது வந்துபோகும்
இடுங்கிய வாசல் நாசித்துளைகள்.
வெயில் இழைக்க அழகுத்திரவியம் கன்னங்களில் நுரைக்கும்.
ஈர்ப்புக்களிம்பு மெழுகி வலை இதழ்கள் விரித்த இதழில் வந்து
சிக்கிக்கொண்ட பார்வைகள் சக்தி முழுவதையும் செலவிட்டே
சிறகுகளைப் பிரித்தெடுத்துப் போகின்றன.
கீழுதட்டு வளைவில் ஒளிந்திருக்கும்
மச்சக் கருவேடனுக்கு அந்த வினோதத்தால் வயிறு நிறையும்.
உமிழ்நீரின் ஈர அஸ்திரத்தை உபயோகித்தே உத்தரவுகளாகின்றன,
உச்சரிப்புகள் குரல் ரதத்திலமர்ந்து
முறுவல் தலைமையேற்க பல்வரிசை விழாநாள் வணக்கம் மொழியும்.
பங்கெடுக்காமல்
பதுங்கியிருந்தே வெற்றிபெறும் விவேகம் ஈறுகளுக்கு.
ரோஜாப்பூச்சிட்ட மேலண்ணம். நாவெனத்துள்ளும் கரையாத ஓர் இதழ்.
காலத்தால் குறுகி தாடையாகத் தகவமைந்திருக்கிறது
நோவாவின் கப்பல்முனை,
காண்பவர்களுக்குள் கருணையைத் தூண்ட வேண்டி.
வழுக்குத் தோள்மேடை மையத்தில் தொண்டை மலர்க்குடுவை.
ஊடும்பாவுமாக நெஞ்சுத்துடிப்புகளைப் பிணைத்து
ஆதரவுப் பசுஞ்சைகையால் முலைகள் நெய்த போர்வை
உறக்கமாக மூடுகிறது.

துவளும் தூரிகைக்கரங்கள் – கணுக்களில் நிறத்தேக்கம் – தீண்டலில்
மண்ணிலும் மாயமாய்த் தழைக்கும் வானவில் அம்சம்.
ரத்தநாளப் படுகைகளில் வைரத்திசுக்கள் –
நகங்கள் வழியே மீறும் மிருதுக் கிரணங்கள்.
தொப்புளைப் படைத்த பெருமிதத்தால் சிருஷ்டி
செவிச்சிறப்பைச் செய்கிறபோது
கடமை முடிந்ததென காது மடல் கழிவுகளில் கையெழுத்திட்டு மறைந்தது.
இடையொடுக்கத்திற்கெதிராக
வலிவும் வடிவுமாய் வெகுண்ட தொடைகள்
இரட்டையாட்படையாக நடையெடுக்கின்றன –
யோனிக் கதுப்புகளின் தேன்நிறத் துணைகொண்டு.
பின்னலாகத் தொகுக்கப் படும்போதெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டு
பிணங்கிச் சுருளும் குறுமுடிகள் பிடரியில்.
அசுரப் போட்டிக்கிழுபடும் கயிறு வலிவுகளுக்கீடாகமாட்டாமல்
இற்று இரு துண்டாவதற்குமுன் பெற்ற இளமை
புறங்கழுத்தில் முதுகில் வேய்ந்த விசைமீது வெளிப்படும்
வியர்வைப்பதக்கங்களை பின்னல் வழி கடந்து
என் கவனம் கீழிறங்குகிறது.
கீழ் வயிற்று மடிப்பின் கர்வத்தைக் கவர்ந்து புகழ் மேடாகிப்போன
பின்புறங்களிலொன்று குலுங்கி மேல் நகரவும்
மற்றொன்று ஓய்வாகச் சற்று சாய்ந்தாடவும்
அடிக்கொருமுறை பணி மாற்றிப் பரிபாலிக்கும்
நடைப்போக்கிற்க்கடிமையாகி.
எங்கோ பெய்த மழை உன் பாதங்களை முகர்ந்தபடி
தவழ்ந்து வருகிறது என் வறட்சிக்கு.
உன் நிழல்படும் இடங்களில் தன் உயிர்நிலையை மாற்றி மாற்றி வைத்து
நன்மையடையத் தவிக்கிறது நிலம்.
உன் குதிகால் அழுந்திய குழிவிலிருந்து முத்தமிட்டு உறிஞ்சிய
உண்மை இக்கவிதை
உன்னைச் சொல்லித்தீராத பாடு என்னைப் பிளக்கிறது
உள் வெளியாய் ஆனது உடல்
உடலுக்கு வெளியே இலங்கும் உறுப்புகள் அனைத்திற்கும்
இயக்கம் என்பது உன்னை வியப்பது தான் அன்பே





( அமுதபருவம் வலம்புரியாய் அணைந்த்தொரு சங்கு தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை, இந்தத் தொகுப்பை எத்தனைமுறை வாசித்திருக்கிறேன் என்பது கணக்கேயில்லை, மொத்தமாக மட்டுமின்றி அவ்வப்போது தினம் தினம் வாராவாரம் மாதாமாதம் என இத்தொகுப்பின் ஒவ்வொரு கவிதையையும் பலமுறை வாசித்திருக்கிறேன், இக்கவிதைகளின் மீதான போதை இன்னும் குறைகிற மாதிரியில்லை, ஒவ்வொரு கவிதையும் அவ்வளவு தீராத காதல் காதல் காதல், ஒவ்வொரு வரியிலும் விரிகிற காட்சிகளில் என்னைத்தொலைத்து எங்கெங்கோ மனம் செல்லுமிடமெல்லாம் செல்லவிட்டு புத்தகத்தை மார்பில் கவிழ்த்து சுழலும் மின்விசிறியை வெறித்துப்பார்த்தபடி அலைக்கழிந்திருக்கிறேன், உணர்வுப்பெருக்கில் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். மஞ்சள் வெயில் பத்தி என்ன சொல்றது,,,,,,, ஐயோ,,,,,,, )



இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து

இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருக்கிறேன்.
அறைக்குள் அடிவைத்ததுமே தெரிந்துவிட்டது,
சந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது விளக்கு வெளிச்சம்.
சிறு மாற்றமுமில்லை – எப்படி விட்டுச்சென்றேனோ அப்படியே
சற்றும் பிசகாமல் இருந்தன எல்லாம்.
தரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல்
நீ நுழைந்து சென்றிருக்கிறாய்.
உன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை
உன் மணம் இல்லை – உடனே படும்படி
உன் கடிதமெதுவும் காணவில்லை ஆயினும்
உன் வருகையை நான் உணர்கிறேன்
எனக்கான செய்தியை அனைத்து
உடுப்புகளின் பைகளிலும் தேடுகிறேன்
அயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை ரசித்து
புத்தகங்களுக்கும் பெட்டியிலும் துழாவுகிறேன்
தலையணை உறைக்குள், பாயின் அடியில்,
போர்வை மடிப்பில், ஏமாற்றம்.
குப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து
கசங்கிக் கிடந்த தாள்களைப் பிரிக்கிறேன்

ஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை – ரகசிய
பென்சில் கிறுக்கல்கள் ஏதுமற்றிருக்கிறது
புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்.
உன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி
பல தடவைகள் சோதித்தாகிவிட்டது
சொற்ப பொருள்களையும்.
புதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று.
கடைசியாக கண்ணாடியின் பின்புறம் பார்த்து
விளக்கணைத்துச் சாய்கிறேன்
ஒருக்கால் நீ வந்திருக்கவில்லையோ?
பிரமைதானோ?
இந்த அறையின் இருட்டு நிசப்தம்
இன்றவள் வந்தாள் என்றொலிக்கிறதே
நீ வந்திருந்தால் வழக்கம்போல
அறை கொஞ்சம் ஒழுங்குபட்டிருக்கும்.
புரளும்போது கைபட்டுத் தண்ணீர் சாடி விழுகிறது.
பாயில் பரவுகிறது நீரின் குளிர்மை.
காலையில் நான் புறப்படுகையில்
காலியாகத்தானிருந்தது சாடி.
நனைகிறேன்.

thursday, April 19, 2012
யூமா.வாசுகி :எம் காலத்தின் மகா கவிஞன்....




தீராத கணக்கு.

எதையோ நினைத்தபடி
எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது
சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து
பிச்சை என்று கேட்டாய்.
தெய்வமே அந்தக் குழந்தை
என்னமாய்ச் சிரித்தது....
அதற்கு மாறாக நீ என்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்
ஓரிரவில் சாக்கடையோரம்
கொசுக்கள் குதறும் வதையில்
துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி
அய்யா என யாசித்தாய்
உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது
எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது....
அதற்குப் பதில் நீ என்னை
அடித்துப் பிடுங்கியிருக்கலாம்
பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்
உன் குழந்தை என் கால்களைத் தொட்டு
கை மலர்த்தும்படிச் செய்தாயே,
ஒஅரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது
எவ்வளவு பாடுபட்டது...
அதைவிடவும் நீ என்னை
முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்
இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்
அனாதைக் குழந்தையை அடக்கம் செய்ட்யவென்று
இரந்து நிற்கிறாய் இன்று
புவி சுமக்க முடியாத பாரமாக இது
எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது.....
அய்யோ அய்யோ என்று
பதறி அழிந்தபடியே
ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து
உன்னைக் கடந்து போகின்றேன்
தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க
ஏன் உனக்குத் தெரியவில்லை.


http://makalneya.blogspot.in/2012/04/blog-post_19.html
மதுக்கடையில் உருளும் கோலிக் குண்டுகள்.

குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து
அலைக்கழிந்த சிறுவன்
நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்
இறைஞ்சிய சில்லரை
கை நழுவி விழுகிறது தரையில்.
எடுக்கக் குனிகையிலோ
நிகழ்கிறதொரு அற்புதம்....
அவன் சட்டைப் பையிலிருந்து தவறி
கலீரிட்டுச் சிதறின கோலிக் குண்டுகள்.
அத்தனை பேரையும் சட்டென்று இணைத்துக்கொண்டு
நெடுக ஓடுகின்றன அவை.
கடந்த காலங்களில் மிதந்து
பார்த்திருப்பவர்களின் பால்யத்தில்
தட்டி நின்றன.
தயங்கித் திகைத்த சிறுவனிடம்
கருணை கூர்ந்து ஒருவன்
தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.
போதை மிகைத்த அன்புடன்
மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.
தாளாக் குற்றவுணர்வில்
நெகிழ்ந்த கரங்கள் பல
ஆசிகளெனக் கோலிக் குண்டுகளைப்
பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்.

சாத்தானும் சிறுமியும்

விலங்கு செல்லின் படம் வரைந்து தரும்படி
என்னிடம் வந்தாள் உமாவெனும் சிறுமி.



ஏழு பென்சில் சித்திரங்களும் ஒரு அழிப்பானும்.

1

செய்தி அனுப்பிச் சொற்ப நேரமாகிறது – நீ
இந்நேரம் துடித்திறங்கி வந்திருக்க வேண்டும்
அலட்சியமா என்னிடம் – நெரிப்பேன் நின்
நீலகண்டம் சடையறுப்பேன்
நீ கெட்ட கேட்டுக்குக் கங்கை வேறு தலையில்
கேட்பதற்கு ஆளில்லை என்று
எங்காவது போய்க் கிடக்காதே
இதோ அழைக்கிறேன் வந்து நின்றி ஏவல் செய்
கொலுசணிந்த பெண் குறித்து
நான் கவிதை எழுத வேண்டியிருக்கிறது
மயானச் சாம்பலையெல்லாம்
துடைக்க மறந்து வந்தாயானால்
தொலைந்தாய் நீ
முடிவிற் சேர்ந்தேன் ஒரு காதலியின் சன்னிதானம்
பூஜை முறை எதுவுந் தெரியாத
முரடனாயிற்றே நான்
கவிதையில் என் ஆவியைக் கடத்திவைத்து
அர்ப்பணிக்க வேண்டும் அவளுக்கு
என் மொழி முதிர உதவி செய்
வசை மொழிந்தேன் என வருந்தாதே
செல்லக் கொஞ்சலை செலுத்திப் பார்த்தேன்
நான் கலைஞன், நீ கடவுள்
காலம் கடந்தும் நாம் இருப்போமாகையால்
உதவி செய்து ஒத்திருப்போம்
ஒருவருக்கொருவர்
என் காகிதங்களில் வந்து கட்டுண்டுகிட
வரைகின்ற வார்த்தைகளையெல்லாம்
விசையுறச் செய்
வரும்போது உன் நந்தியையும் நாகத்தையும்
அழைத்துவா –
அடிக்கடி சிகரெட்டும் டீயும் வாங்கி வர
அவையும் எனக்கு வேண்டும்.

2.
காதலெனும் பேறு சற்று முன்பு
என்னைத் தீண்டியது தோழனே . . .
அடுக்கு மாடி குடியிருப்பல்ல என் இதயம்
அதன் முகப்பில்
படிக்கட்டுகளோ கதவுகளோ இல்லை எனவே
வெளியிலிருந்து ஒருகாலை எடுத்துவைத்து
மிகச் சரளமாக உள் நுழைந்தது காதல்.
அது வரும்போது நான் விழித்திருந்தேன்
கொலுசொலி கேட்டுத் திரும்பினேன்
நொடியில் நூறு பங்கிலொன்றில்
சரியாகக் கண்டுகொண்டேன்
அதுவேதான் அதுவன்றி வேறில்லை
என்னிடம் இருந்ததையும் இல்லாததையும் கொண்டு
முடிந்தவரையிலும் முடியாதவரையிலும்
நான் அதை உபசரித்தேன்
என் எளிமையால் துடைத்துச் சுத்தமாக்கிய
துதிபீடத்தில் ஏற்றினேன்
ஆனால் அது ஒப்பவில்லை
இன்னும் அனேகருக்கு
தீட்சையளிக்க வேண்டியிருந்ததால்
வந்த வேகத்தில் விடைபெற்றது
துயரம் கிடந்தது அதற்கு மாற்றாக பீடத்தில்.
அதனிடமிருந்து வந்தது இதுவானபடியால்
தொழுதே ஆகவேண்டும் நான் துயரத்தையும்.
காதல் தோன்றியபோது தொடுத்த இன்பத்தை
வரையறுக்கின்ற வார்த்தைகள்ஏதும்
உன்னிடமுண்டா தோழனே?
மெய்யாகவே
என் வாழ்நாளைக் கொடுத்து
வாங்கிக் கொள்கிறேன் அவற்றை.



3

சிறு குரலில் பேசிய உன் கொலுசு
விடுத்த வடிவம் என் நெஞ்சில் வைசூரி
வலிக்காமல் இனிதுறையும்.
இன்றுன்னைக் காணாத
வேதனை வேறுவிதம் - அதில்
மூழ்கிஎழுந்ததும்  திக்பிரமை.
கிடைத்ததற்கரியதைப்போல் திருடிச்
சூடின சூழ்ந்ததெல்லாம் - ஆயினுங்குறையாமல்
அப்படியே உள்ளது திகைப்பு
இன்று யாருக்குமே
சொல்லுக்குச் சரியாக ஸ்வரபடவில்லை சைகை
பட்டம் விடுவதற்கு மொட்டை மாடியில்
இடம் கேட்ட சிறுவர்கள்
அவதூறுகளைச் சுமந்து குழு பிரிந்தனர்
எந்த பெண்ணிடமிருந்தும் எனக்கு
நற்தொண்டாற்ற வரவில்லை உன் சாயலின் ஒரு சதவீதமும்.
இணை சேர்ந்து நகரும் சிவப்புப் பூச்சிகளை
சாலையோடு சைக்கிள்ச்சக்கரங்கள்
விளையாட்டுச் செலவாய்ச் சிதைக்கின்றன
வெறுத்து மேகத்திரை இழுத்து
மறைந்தான் சூரியன்
கடும் விரக்திக் கோடை மழை ஒழுகி
கட்டிடச் சுவர்களில் சோர்வு நீர்ச்சலுவை .
நடந்தால் ஈரத்தரையில் தடம் பதியுமெனத் தயங்கி
கடைப் படிக்கட்டில்  காத்திருக்கிறேன்
கொஞ்சம் திடம் வருவதற்கு .
நான் இறந்த குழந்தை - என் உதடுகளைக்
கன்னத்தோடு ஒற்றிக்கொண்டால்
முத்தம் பெற்றதாகிவிடாதென்று புரிந்து என்னைக்
கைவிடுகிற இன்றின் முற்றத்தில் -
முன்னால் சென்ற ஆட்டோவிலிருந்து விழுந்த ரோஜா
அடுத்து வந்த பேருந்தினடியில் சிக்கியது
ரத்தம்  தெறிக்காத தூரத்திற்கோடினேன்
இன்றின் மையத்தில்
வாய் திறவாத முயலாய் அமைந்த குப்பைத்தொட்டியில்
அணையாத சிகரெட்டை வீசிச் சென்றார்கள்
தொண்டைச் சூடுற்ற முயலைக் காணாதிருக்க
முகம் மறைத்த கைகுட்டையில்
கண்களைக் கிழிக்கின்றன காட்டெருதுகளின் நாவுகள்
முடியும் அகாலத்தில்
தலைக்குமேல் சுழலும் மின்விசிறி தன்
மெத்தச் சுடுவியர்வையால் துளை க்குமோ என்னை
வலிக்காமல் இனிதுறையும் வைசூறித் தெம்பிற்கு
உன் பார்வைப் புழக்கமற்ற தினங்கள் பலவும்
தாங்கும் தகுதியுண்டு
இடையிடையே நீ தெளிய வைத்தால்
தண்ணீராவது பருகிக்கொள்வேன்.

4.
நீ என்னை ஏறிட்டுப் பார்த்தாய்
உன் பார்வை எனும்  எஸ்கலேட்டர் படிகள் இயங்கின
வழிகாட்டும் வரைபடத்தை வழங்கின கொலுசுகள்
நான் நின்றதுதான் தெரியும் நெடுந்தொலைவு நீங்கினேன்
வந்த இடமொரு வதை முகாம் - அங்கே
கொல்லும் கருவிகளின் கூட்டத்தில்
கருப்புப் புள்ளியிட்ட சுரிதாரும் உண்டு
உச்சிக்கிளை இலவங்காய் வெடித்து - பஞ்சுப் பிசிறு
மெல்ல நிலமணைவதுபோல்
சிமெண்டுத் தரையின் சிகையொப்பனை
சிதையாதபடிபோலும் நடந்தாய்
அதைக் கண்ட பிறகுமா நான் பிழைத்திருப்பேன்
ரூப அரூபங்கள் எல்லை பிரிகின்ற பாங்கை
நடையென்று சொன்னால் அது தவறு
உன் கொலுசொலி நிரம்பிய கடல் இந்த வராண்டா
கணுக்கால் காற்றுந்த சின்ன
அலைகளென ஒதுங்கியசைகிறதே புடவை.
உதித்தபோது உணரவில்லை - உன் நெற்றியில்
நிலைத்தபோதே நோக்கினேன்,
சீதளச்சூரியன் சுருங்கியதாய் ஒரு பொட்டு.
நடைவழியில் நான் நிறுத்தியிருந்த
கிரகிப்புத் தூண்களெல்லாம் - உன்
ஒயில் தாளாமல் வீழ்ந்தேன். நானும் வீழ்ந்தேன்,
.......... முன் உள்ள இருக்கையில்
நீ அமர்கிற விமரிசையில்
பெரு முனிவன் தவவலியால்
மன்றாடிப் பெற்ற அனுக்கிரகத் தூசிகளை
உள்ளங்கையில் வைத்து ஊதினான் - அவை
லிப்ட் மூலம் கட்டிடத்தின்
இரண்டாம் தளம் வந்து இருக்கையில் படிந்தன,
அமர்ந்தது நீயில்லை.
உன் பெண்மைப் பிரபஞ்சத்தில்
காதலின் முதல் பிரணவம் ஓதினேன்
விம்மும் அதன் விழுதுகள் எல்லாம்
உன்னைச் சிறையெடுக்க விரைகின்றன
தப்பி மறைந்துவிட முடியாது மாதேவி - நீ
செல்லும் இடமெல்லாம் காட்டித்தரும் கொலுசுகள்
அதைக் கழற்றவும் இயலாதபடி
காவல் கடமையாற்றும் கருணையின் கண்களுக்கு
இமைகளேயில்லை.

5.
பெரிதினும் பெரிதான சோதி
பெண்கள் விடுதியில் தஞ்சம் - தன்
அவதார மகிமையுணராது
பேருந்து நெரிசலில் அடைந்து வரும்.
ஒலி உபதேச நூலின் பக்கங்களை
நடையில் பறக்கவிடும் கொலுசுகள்.
கேசச்சுருள் பிரிந்து
நுதலில் நளினமாட நுழைகையில்
பேராலயமாகப் பெயரெடுக்க எனக்கு
பக்தி பக்குவம் போதாதோ என
ஏ.ஸி. முனகலாய் அழும் அலுவலகம்.
எல்லையற்ற ஏக தத்துவம் -
............, கதவுகளுக்கும்
வருந்திக் காத்திருந்த எனக்கும்
சமமாய்ப் பகிரும் கனிந்த பார்வை.
வேதகோஷப் பறவைகள்
அதைச் சுற்றி வருகின்றன - தானொரு
விக்ரகம் என்பது விளங்காமலே
விளையாட்டாய்ப் பேசிப்போகும்
சிரஞ்சீவிக் கீர்த்தனை சிறிதே உணவுகொள்ள
கீர்த்தி வட்டம் தெளியும்
கேண்டீனுக்கு உள்ளும் புறமும்
படைப்பும் நிலையும் செயலும்
மல்லிப் பூக்களாய் ஆரோகணித்த
என் சஞ்சாரதேசம் -
அறிவின் உட்கிடையடுக்குகள் அனைத்தும் முயன்று
குறிப்பாலுங் கொள்ளமுடியாது களைத்த
நுண்மா நுண்மையின் திருமேனி,
நிற்கும்போதும் அமரும்போதும் அதன்
பின்னணியாய் அமைந்து அருகதை பெற
பொருட்கள் தவிக்கின்றன.
கொன்ற கலியுடலே வளைகளாலான கரம்
அடக்கமாய்
காகிதத்தில் ஏதோ எழுதுகிறது
தாளில் பிரதிபலித்த தியானப்பெருமை
பார்த்திருந்த என்னையும்
பிரசித்தனாக்கியது
இவ்வுலகில்- இப்பிறவியில் - இப்போதே
நிகழும் அதிசயத்தின் அருகிலிருக்க
அனுமதிபெற்றேன்
எனக்கு மட்டும் புரிந்தது அதன் பரிபாஷை.

6.
அன்று குளித்தது
மண்ணோடும் விண்ணோடும் தொடர்பற்ற
ஒரு வகை நீரால்.
வாயிலோடு சென்றவர்கள்
கனவானுக்குச் சொல்வதைப்போல்
வணக்கம் தெரிவித்து - குழந்தையிடம்
கொஞ்சுவதைப்போல் கேட்டார்கள்
“முடிந்ததா வாழ்வின் முதல் குளியல்?”
நகரத்தின் அனைத்து வீடுகளின்
கதவுகளையும் தட்டி
“நான் எப்போதேனும் உங்களுக்கு
குற்றமிழைத்திருந்தேனாயின்
இப்போதே தண்டித்து விடுங்கள் - நாளையே நான்
நிரபராதியாக வேண்டியிருக்கிறது”
என்று நெகிழ்ந்து நேற்றிரவு
கேட்டுக்கொள்ள விரும்பியதை
அறிந்திருந்தினர் அனைவரும்
அழுக்கான பழைய உடை
உறவையும் மரியாதையையும்
இப்போதுதான் காட்டுகிறது -
“வேண்டுமானால் அருமையானவனே
உன் உடலில் படாமல் ஓரிரு இழைதூரம்
விலகியே இருந்து மறைக்கட்டுமா”
“வேண்டாம் என் பொருட்டு உன்
வழக்கம்  மாற்றாதே” என்றேன்
பரவசம் மட்டுமே செல்லும்படி
இடுங்கியிருந்தது உணவுக்குழாய்
ஒரு மிடறு பழச்சாறு பருகியபின்
உதடு துடைத்த விரல்களில்
முன்னம் முதலில் குடித்த முலைப்பால் வாடை
வீசிய காற்றைச் சாக்கிட்டு
மூடிய அறைக்கதவு
தெருச்சகுனம் பார்த்து திருப்தியுடன் திறந்தது
நீள வாய்ப்பாக வந்தது ரயில்
“உயர்ந்தவனே படிக்கட்டில் நின்று வராதே
உள்ளே வந்தமர்ந்து எனக்கு உதவி செய் -  நீ
செல்லும் காரியம் நானறிவேன்” என்றது ,
ஓடும் ஓசைக்கிடையில்.
இது மிகப்பெரிய கட்டிடத்தின் வாயில்
இங்குதான் அவள் என்னை
சந்திப்பதாகச் சொல்லியிருந்தாள்
உடல் அணுப்பிராணிகளின் பல்லாயிரம் செவிகள்
காத்திருக்கின்றன கொலுசொலிக்க.

7.
காலகாலமாய்க் கேட்டுக்கொண்டிருந்த
காதல் பெண்ணைக் கண்டேன் காலதேவா
அடையாளத்திற்கென்று நீ கொடுத்தனுப்பிய
இலச்சினை இருந்தது அவளிடம். நன்றி!
அவள் நடக்கிற நீள் வராண்டா
என் காதல் ரசச்சரடு
படுத்திருந்த மஞ்சள் வெயிலில் பாதங்கள் பதித்தாள்.
நான் உற்றறியவே வந்த உருவின்
கொலுசொலி துய்த்தேன்
இது பொறுக்க முடியாத நன்மை - பொங்கட்டும்.
இனி தரிப்பதற்கில்லையொரு பாத்திரம்.
அருட்களஞ்சியம் அணுகிற்று - அகக்காம்புகள்
சுரக்கத் துடித்தன புலமை.
மகாசுவை பின்புலத்தில் மேல் நோக்கு
மோகம் உரக்க - புன்னெறிச் சந்நதமடங்கிற்று,
செழித்த புனிதம் அவள்.
ஆற்றுவித்தது நல்லதாபம் அசாந்தியில்லை - தேவா
காலாந்திரக் கீழ்நிலை கொன்றன கொலுசுகள்
சொல்லுக உடனே - அந்தச் சொற்களில்
சுகம்பெறுவேன் நானும் என்றது பேரியற்கை.
கனவுகளில் கற்றுவைத்த மந்திரம் சொன்னேன்
சென்ற ஆயுளெல்லாம் செதுக்குவேலை செய்து வைத்த
சங்கற்பமொன்று சமர்ப்பித்தேன்
ஆழப்பொருள் அமைவு. அமைதியின்றி
அள்ளி இறைத்தேன் என் அருநிதியம்.
பாவம் நீ முட்டாளே உனக்கு
புரியும்படியாகவே சொல்கிறேன் கேள்
ஒடுக்கிப் பிடித்தும் ஓங்கிய பதட்டத்தோடு
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்றேன்
என்ன உதவி வேண்டும் என்கிறாள் அவள்
தேவா . . .
உன் கிண்டல் நகைக்கங்குகள் தீய்க்கின்றன.
உன் தயாளத்தின் தாதுநாடி இறுகுகிறது என் கழுத்தில்
காலதேவா . . .
கவிப்பிறவி நான் - களைப்புண்டாக்க
முடியுமா உன்னால் ?

8.
என் வரம்பற்ற உத்தேசத்தின்
விவரணைச் சுழற்சியில்
கசிகிறது யுத்தப் புகழ்ச்சி.
எந்த  சொல்லமைப்பிற்குள்ளும் வராமல்
குழப்பிக்காட்டும் வகையிலே தயாரித்தேன்
என் வழக்கின் விபரத்தை.
கவர்ச்சியுள்ள பிரச்சினை மீதல்ல
காண்கின்ற எல்லாவற்றிலும் தெரியும்
கடுமையான சந்தர்ப்பத்தைக் குறித்து - என்
உக்கிரக்கோட்பாட்டோடு கலந்தாலோசிக்கிறேன்.
தற்காப்பாக
உடன்படிக்கை தயாராகுப் மேசையை
கடித்து துண்டாடினேன் பற்களால்
நோக்கமற்று நடக்கின்ற
கலகத்தின் தலைவனாகிய நான்
கருத்தின் உள்ளடுப்புகளில் மாறும் புத்தமைப்பு
உறுப்பைத் தீண்டுகிற கிளர்ச்சியோடு ,
விசாரணையில் காட்டவேண்டிய
சமரச நெகிழ்ச்சியை
சிறுநீரால் மூழ்கடித்துவிட்டேன்
சொல்லுங்கள் !
ஏன் எப்போதும் விடுபடுகிறது
விடுதலைப் பட்டியலில் என் பெயர்
பெயரை அடித்த கொடுங்கோல் பேனா
என் சட்டைப் பையிலிருந்தது
அதைப் பதுக்கும்போது நீங்கள் பார்த்தீர்களா
என்னை
படுதோல்வி அடையவைப்பதற்கான சூத்திரம்
என் வாதத்தின் ஒரு வார்த்தையையேனும்
ஒப்புக்கொள்வது என்பதை நீங்களறியவில்லை
படுகொலை - சித்ரவதை - அவமதிப்புகளின் சாரமாக
எழுகின்ற  என் நிபந்தனைகளைப் பிளக்கும்போது
உன்மத்தம் கோரும் குரலெ ஒழுகுவதை
நீங்கள் கண்டுபிடிக்கப்போவதில்லை
உங்கள் அறியாமையால் என்
ஊக்கத்தின் மமதையேறுகிறது
உடைக்கிற அதிநியாயம் கொண்ட
என் மறுப்பு
இப்படியே விட்டுவைக்கப்போவதில்லை
எதையும் என்னையும்.




1.என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்!, 
2. அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு. 
கவிதைத் தொகுதிகளிலிருந்து

ஏழுவால் நட்சத்திரம்

1.
இரவில் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிற்கும் உன் கனம்
பல நூறு துடிப்புகள் ஓட ஓடத் துரத்தியடிக்கின்றன
காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை விட்டுவிடு
மலிவான கலவைதான் என் உடல்
புறக்கணிக்கப்பட்டு தங்கிப் போனதுதான்
ஆன்மாவென  எனக்குத் தரப்பட்டது
குன்றுகளின் தவளைப் பாய்ச்சலுக்குக் களமல்ல இது.
ஒற்றை வரத்தையும் தவறுதலாகப் பிரயோகித்து
வீடென்றடைந்து மணற்கடிகாரமெனப்
பொழியும்  மரணத்தில் மூழ்கும்போது புரிகிறது.
போர்முனை வாளாக மாபெரும் இரவுகளைச் சுழற்றி
நீ துண்டித்து விளையாடாமல் இருந்தால் - நான்
இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போவேன்
இரவு சிரிஞ்சிலிருந்து உன் விரல்களாலே செலுத்தப்படுவது
வெளிக்கசிந்துவிடாமல் காக்கிறது என்னைப் பொதிந்த பகல்
இரவு
இளக இளக அதனின்று கழன்ற
இணைப்புத் திருகாணிகளாய் நீ வீழ்ந்து உண்டான துளைகளில்
பரிதற் கையேட்டின் சில பக்கங்களும் ஒழுகி ஒழிந்தன
இரவு
தன் கூந்தலாக என் குடலைப் பின்னலிடுகிறது
பறித்து வைத்திருக்கிற பசியைக் கொடு பூவாகச் சூடட்டும்
இரவு
உன்னை அறிவித்து எத்திருப்பங்களிலும்
எழுதி வைத்திருக்கும் சுவர்கள் எழுகின்றன
நான் தஞ்சமடையத் தட்டிய கனவு வீடுகளின் கதவுகளில்
எண்களாக நீ எதிர்கொள்கிறாய்.
இரவு
கெட்ட புத்தி புகட்டப்பட்டதால்
சீராகப் பரவும் யோக்யதையைக்கூட இழந்தது.
என் திமிறல்களைப் பொருட்படுத்தாது கனிவுபுகா காட்டுநிறத்தை
தடவித் திருப்தியடைந்தபின் தூரிகை கழுவிய நீரை
பட்டும்படாமலும் தெளிக்கிறது சுற்றிலும்.
உனக்கான ஊஞ்சல்களாக
நீ என்னுள் தோற்றுவித்துக் கொண்டிருக்கும் பெருமூச்சுகள்
நிலவின் சீழ் - வீணையின் ரத்த வாந்தி
எல்லா துளைகளிலும் மலப்பெருக்கு
நட்சத்திரங்களிலிருந்து நீ தொங்கவிட்டிருக்கிற
தூக்குக் கயிறுகள்
காதலின் விதைப்பையை யானைக்கால் மிதிக்க
பீறிட்ட திரவம்
விட்டுவிடு நான் பலகீனன்
தனதல்லாத ஒரு துளியென என்னைக்கருதத் தொடங்கிய கடல்
திரும்பத் திரும்ப அலைகளை ஏவி
அவமானகரமாய் கரையொதுக்குகிறது
என்னைக் கரையவிடு
ரணத்தில் கிடந்து நார்பிடித்த சொற்கள் இவை
புரியவில்லை என்று போகாதே- நன்கு
சவரம் தெய்த வார்த்தைகள் சாத்தியமே இல்லை
விளிம்புகளற்ற பிரபஞ்சக் காகிதத்தில்
விவரிக்கிற கருணைமனுவாக
“காப்பாற்று” என்பதை மட்டும் நீ
விளங்கிக்கொண்டால் போதும்
இன்னும் கொஞ்ச நாள் இருப்பேன்.

2.
நகரத்தின் திசைகள் என் மரணப் பணிவிடையாக
கீழ்வானில் எடுத்தாள்கிறது
உன் குதிகால்களுக்குரிய சிவப்பை.
நீ இல்லாத இடத்திலும் சுவையுதவும் பாதஸ்வரத்தை
விழுங்கிய வேற்றொலிப் பகைவளத்தின்
இறுமாப்பை ஒற்ற்றிந்தேன்.
யாரோ தவறவிட்ட சூன்ய சம்பாதனையை
என்னுடையதாக்கத் திட்டமிடுகிறது.

இடிச்சமூகமணிவித்த தடித்த பூட்சுகள்
என் தேடலின்மீது ஓடுகின்றன - நல்ல
தையல்காரனாக வந்து அளவெடுத்தது எதுவோ
அது மறைவில்
தச்சுப் பணியாளாகி எனக்கு சவப்பெட்டி செய்கிறது
கன்னத்துப் பருவாக ஆஷ்டிரேவிற்குள் கிடக்கிறேன்
சாம்பலைத் துப்பி வாய் சிவக்க
வந்துவந்து போகிறது சிகரெட் - உன்
முலையடிவார வியர்வைச் சதுப்பின்
கதகதப்பைச் சொல்கிறது சாம்பலும்.

தேர்வெழுதச் சென்று வினாத்தாளின்
தவறுகளை மட்டும்
திருத்திக் கொடுத்துவிட்டு வந்தபோதுமில்லை
உடைமையின்  பெயர்தெரியாத யோனியில்
லிங்கத்திரியிட்டு சுடர்ந்தபோதுமில்லை
வயிறு எனும் தசைப்பந்தாய் முழு உடலும் குறுகி
முட்களால் உதைபட்டு
சாலைகளில் உருண்டபோதுமில்லை
உன் கொலுசொலியை மேய்ந்தபோது, கடவுளே!
இடையிடையேயிருந்த
காதலின் இலைகளையும் மென்றுவிட்டேன்
சுவாசம் மட்டுமே நிகர எடையாகி அப்போதுதான்
அணுக்கூர்மைக்கும் விகாசத்திற்குமிடையில் - ஒரு
அம்புக்குறியின் தலைப்பாகமாக சுழலத்தொடங்கினேன்
நீ விடைபெற்றபோது உடைந்த
ஒளி வட்டங்களுக்கு மாற்றாக
பற்சக்கரங்களைக்கொண்டு பயணிக்கமுடியாது
குறுக்கெழுத்துப் போட்டியின் கட்டங்களில் சில
மிச்சமிருப்பதுபோல்தான் தோன்றுகிறது.

3.
உன் முத்திரையிடப்பட்டிருக்கும் நாணயங்களை நாட்களாக
ஒளித்துச் செலவளிக்கிறேன் - நான் மென்று துப்பிய சக்கைகளாக
கடைவாய்ப் பற்களின் கொண்டாட்டத் தடங்களுடன்
செல்லும் சாலைகளிலெல்லாம் சிதறினாய்.
மிதிப்பவர்களின் மறதி உன் வழிப்பறிக்கஞ்சி
தானாகத் தவறவிடும் தகவல், அவர்களுக்கு
காதலைக் கோர்க்கும்.
ஊர் ஒதுங்கிய விளைநிலங்களின் இடையில் நின்று
சலவை செய்து தொடர்ந்து நீ அனுப்பும்
நம் முதல் அந்தியை உடுத்துகிறேன் இன்றும்.
உடுத்தும் முன்பு
புரிபடாமல் மின்னிற்று சித்திரப் பொற்புதையல்.
இரவில் கூடும் அதன் பொருள் ,
நீ என்னைச் சிந்திக்க சோர்வுடன்
அமர்ந்திருப்பதாய் அமையுமானால் - அந்த நாற்காலி
எத்தனை சென்டிமீட்டர் உன் பின்புறத்தை
உள் அழுத்திக்கொண்டிருக்கும்.
கால்மேல் காலிட்டிருப்பதால்
எப்படியெல்லாம் நெருங்கிக் குழைவுபடும் யோனி.
முலை மதர்ப்பில் திணறுகிறது மேசை முகம்
கவிழாமல் நிமிர்ந்தமர்.
தேக சஞ்சாரத்திற்கிடையில் என் நாவு
அடிக்கடி தங்கிப் போகும் தொப்புள் குழியை
மடக்கவிடுவது எனக்குச் செய்யும் மரியாதையாகாது.
உன் முதுகுத்தண்டு
என் குறியின் அம்சமாய் உன்னை நிறுத்துகையில்
அதை வளைத்து வருத்தாதே.
இடுப்புத் தசைப்பிதுக்கச் சிறுவேகத் தடை பிறகும்
புகமுடியாத என் விரல்கள் திரும்பி வந்து
புகார் செய்கின்றன என்னிடம் - புடவை
இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிடு.
உன் செறிவு மிகாமலிருப்பதற்காக
இடப்பட்ட இருபது முற்றுப்புள்ளிகளில்
ஐந்தைச் சூடிய விரல்கள்
மூப்படைந்த நாட்டத்திற்குக் கடிதமெழுத
மேசை இழுப்பறைக்குள் காகிதம் தேடுகின்றன.
வெப்ப மையெழுதிய கோடையின் கண்கள்
இமையடைத்தபோது ஈன்ற தளிராய்
வழங்கட்டும் உன் வரிகளை விரைவில் என்னிடம்.

4.

மறுபடியும் வந்திருக்கிறேன்
உன் வீடுள்ள தெருவை இம்முறையும் கண்டுபிடித்தேன்
தெருமுனைக் கடையில் டீ அருந்திக் கூடுதலாக
ஒரு சிகரெட் அருந்தும் நேரமே தாமதித்தேன்
நீ பணிமுடிந்து திரும்பும்போது எதிர்ப்பட்டு விடக்கூடாது
என்பதற்காக
ஓய்வுநாளாகப்பார்த்து வந்திருக்கிறேன்
கனவில் நீ மரமாக நேற்று தோன்றினாய்
எதிர்ப்பதுபோல தழுவும் இலையடர்த்தியை விலக்கி
உடல் கீறும் கிளைகளைப் பற்றியேறினேன்
தாக்குவதுபோல் பூங்கொத்துகளை வீசி
தொட்டுக்கொள்கிறாய் என் ரத்தத்தை
உன் அடங்காத ஆசையினால் மேலும்
அவ்வளவு கிளைகள் தோன்றின - அவ்வளவையும் அணைத்து
ஆவேசமாக நான் மேலேறினேன்
பலம் தீர்ந்தும், பரவசம் மேலும் கிளைகள் கேட்கிறது.
என் களைப்பில் கவனம் வைத்து நீ கிளைப்பதை நிறுத்தினாய்
உச்சிக்கிளையில் நான் அமர விந்து பொங்கியது
உன் உடலின் ஒரு இடமும் விடாமல் அது பரவுகிறது
நீதான் தடவிக்கொள்கிறாய்
விந்து பட்ட இடமெல்லாம் நிறம் வெளிற ஒரு
ஸ்படிக மரமானாய்
உச்சிக்கிளையை மெல்ல வளைத்து
தரையில் சிந்திய ஒரு துளியையும் நீ உறிஞ்சியபோது
நாற்காலியிலிருந்து எழுந்து நிற்பதுபோல்
தரைக்கு வந்தேன்
உன் ஸ்படிக உடல் ஊடுருவி
வெளியைப்பார்த்த்துபோலவே – இந்தக்கட்டிடங்களை ஊடுருவி
உன் சமீபம் உணர்கிறேன்
எப்போதாவது நீ கனவில் வருகிறாய் – நான்
வெகுதொலைவு கடந்துவந்து இங்கு நின்றுவிட்டுப் போகிறேன்
சென்றமுறை திரும்பிப் போக முடியாமல்
அகாலத்தில் குடித்த மதுவெல்லாம் கண்ணீராய் வழிய
இந்த ஊரின் தெருக்களை விடியும்வரை
வலம் வந்த்து போலன்றி
பேருந்து நிலையத்தில் அமர்ந்து இதை எழுதக்கூடிய அளவிற்கு
துக்கம் குறைந்திருக்கிறது
5.
மனிதம் சேகரித்த மகத்துவங்களைக் காப்பவன்
மறந்திருந்தானோ - நீ விடுபட்டு
வீதிவழி வந்தாய்
கடவுள் விரல்கள் காட்டும் அபிநயங்களின்
அர்த்தங்களறியாதவர்களுக்குதவ உன் கொலுசு
தூண்டற்குறிப்புகளை வாரிச் சொரிந்தது.
அதிலொன்றை
கணிதக் கிருமிகளால் தொல்லை எதுவுமின்றி
வெளிவிழுங்கிக் கிடந்த நான் எடுக்கக் குனிந்தேன்
பெட்டிக்குள்ளிட்டு குலுக்கப்படுகிற வண்டாக
ஓங்கார சுழற்சி வீழ்த்தியது
காதற்கிரகத்துள்
குனிந்தபோது தாழ்ந்த
என் கொம்புகள்மீதும் தழும்புகள்.
ஒவ்வொன்றிற்கும் ஒதுக்கப்பட்ட
வலி அளவை ஒப்பாமல்
ஒட்டுமொத்தமாய்ப் பறித்துக்கொள்ள
தழும்புகளுக்கிடையே போராட்டம்
இதற்கொலு பலிகாரம்தேடி உன்னிடம் வந்தேன்
உன் வள்ளல் கண்கள் பரிவு காட்டின
அமைதியெனும் உன் பணியாளனோ
ஒவ்வொரு தடவையும்  மிகுதுயரளித்தான்
செப்பனிட விழையும் என் சிந்தனைக்குள்ளும்
கொலுசுமணி இசைத்தான்யங்களை
சாமர்த்தியமாய் செலுத்திப் போனாய் நீ
உண்டதுபோக மிச்சமிருந்ததை
ஊன்றி வைத்தேன் நிலத்தில்
பிரிவால் எரியும் என் சிதைக்கு
கொலுசு ஓசைப்பயிர் கருகி
நிஷ்களங்க நெய்யூற்றுகிறது - மிக
உச்சத்தில் எழுந்து அடங்கிக்கொண்டிருக்கும்
புகையின் முனையில் என் உதடுகள்
உன் இருப்பிடத்தின் கதவுகளை
முத்தமிட்டுத் திரும்பியிருக்கிறது.

6.
கடலோடு காந்தர்வம் - கரை
மணலோடு கலந்தென் மாமிசம்
வதம்தான் தான்யத்தோலுரித்தலும் - அதற்கு
தண்டனையுண்டு வேதத்தில்.
மொட்டை வலிந்து மலர்த்திப் பூவாக்கிப்
பெரிய விலைக்கு விற்றவள் நீ
அறியாத் தோரணை
போதும் திகட்டுகிறது - முன்னும் பின்னுமான
தலைமுறைகளுக்குப் போதுமான திட்டங்கள் உன்னிடம்
எனக்கு நிர்வாகியாக
நாசத்தை நியமித்தாய்
இருப்பு நுகர்ச்சி தள்ளுபடியாயிற்று.
ஓரினப் புணர்ச்சியிலிறங்கினோம்
நானும் மதுவும்.
மோனத்தாழிகளில் பருவமடைந்த
பிணக்கச் சக்கரங்களுக்கு
அறிவுப் பலகணிகள் பாதையாகப் படுத்திருக்க
காலத்தின் தாளக்கிரமம் கலைத்து
எங்கும் நிற்காமல் ரயிலோடுகிறது.
தாங்கும் உன் சக்திமீது சந்தேகம் எனவே
தந்தவைகளைத் திருப்பவில்லை - நீ
பொய் முதல்வைத்த பண்டமாற்று,
பதிவு செய்த முறிவுகளின்
எக்ஸ்ரே தொகுப்பிலிருந்து
வட்டி விகிதமாக உனக்கொரு சொல்
போ.

7.
படமெடுத்த உன் வெட்கத்தின் பாம்பு முகம்
பக்கவாட்டில் புடைத்துச் சூழ்கிறது சொல்லை
மயக்கிக் கிடத்த.
மௌனச் சதியிசை நடத்துவோன் கரங்கள் தொய்ந்து
இதோ, பிளந்தது படச்சுருள்
இதுவரை நீ உபயோகித்திராத
அர்த்தத்தின் கன்னி கழித்து
உன் சொல்லின் ஒலிப்பாராசூட் விரிந்துவிட்டது
சிகரமாக ஸ்தூலம் பெற்ற
அர்ப்பணத்தின் மேலிருந்து சந்தித்தேன் சொல்லை
மொழிகளின் தாதி அச்சொல்
சொல்லின் செவி ஸ்பரிசக் கரன்ஸிக் கட்டிலிருந்து
ஒரு நோட்டு மாற்றிய சில்லறை
சிப்பிப் பெட்டகங்களுக்குள் பூட்டப் பட்டிருக்கிறது
கிளைப் புஜங்களில் அச்சொல்லின் பலமிருந்து
மரங்களோடிணைகிறது
சொல்லின் தயையால் கருப்பாத்திரங்கள்
ததும்பிப் பிறந்த சரித்திரங்கள்
அவ்வொற்றைச் சொல்லெனவே சுருங்குகின்றன.
சொல் உற்று ஊற்றானேன்
அருவியாகி
அருவி அகலமாகிக்கொண்டிருக்கிறது
நடமாடும் நிலத்துண்டே ஒழுக்கேற்று நில்!
வீழ்ந்து ஓடப் போதாது உன் பரப்பு
கரைகளை அரித்து உன்னைப் பெருக்குவேன்
வேகம் ஆழம் தோண்டும்
நதியாட்சி நடக்கும் உன் அரியணையிலிருந்து.

 ·
எச்சரிக்கை

- யூமா வாசுகி
posted by Lakshmi Manivannan
21 December at 19:36

என் பங்கு சோற்றை
நீங்களே ஒழித்து வைத்திருக்கிறீர்கள்
எனவே என் பசிக்கு
பொறுப்பாவது நீங்களேதான்
எனக்குண்டானதை விடுவிக்கச் சொன்னால்
உழைத்துப் பெறும்படி அறிவுரைக்கிறீர்கள்
உங்களுடையதை விட
நூறு மடங்கு அதிகமானதென் உழைப்பு
உணவின் பொருட்டாய் அமையவில்லை
என்னைப் போன்றவர்களிடத்தில் நீங்கள்
ஒரு போதும் நியாயம் காட்டியதில்லை
அறியாத்தனங்களை
கண்டுகொள்ளாதிருப்பதற்கும்
ஒரு எல்லை உண்டு
செல்வந்தனாவதற்குரிய சூத்திரத்தை
உபதேசிக்காதீர்கள் தயவு செய்து
எனக்கு
கவிதை வசப்பட்டாக வேண்டும்
நான் நடக்கத் தரையிருக்கிறது
என்னுடைய காற்றிருக்கிறது
எழுத்திடையில் பசியெடுக்கும் போதுதான்
இருந்திருக்க வேண்டிய
என்னுடைய சோற்றைத் தேடுகிறேன்
நான் மீண்டும் கடவுளாகும்படி
ஒரு கவிதை கட்டாயப்படுத்துகிறது
நான் எழுதப் போகிறேன்
முடிந்த பின்
இந்த படகினுள்ளே பார்க்கும் போது
எச்சரிக்கை
என் சோற்றுத்தட்டு வந்திருக்க வேண்டும்

உங்களுக்கு ஒரு
சிறிய சலுகை தர முடியும்
கடற்கரை வெளிச்சம் மறைந்து
வெகுநேரம் கழிந்த பின்பே
படகினுள் பார்ப்பேன்

[ இரவுகளின் நிழற்படம் கவிதைத்
தொகுப்பிலிருந்து ]

பெண்ணைப் பற்றி கடவுள்
பெண்ணைப் பற்றி கடவுள் சிந்திக்கத் தொடங்கினானே

அப்போதுதான் நான் அவனை உணர்ந்தேன்.

கோடிக் கற்பனையில் யுகங்கள் மூழ்கியிருந்து

அவளுக்கொரு வடிவைப் புன்னகையுடன் தேர்ந்தானே

அப்போதுதான் அவனை அறிந்துகொண்டேன்.

அவளை அவ்விதமே தீர்மானித்ததற்காக

முற்று முழுக்கவும் அவனை நம்பினேன்

தன் முடிவில் எந்தத் தடுமாற்றமுமின்றி

அப்படியே அவளைப் பிறப்பித்தானே, அதனால்

வெகுவான மரியாதை அவன்மீது கூடிக்கூடி வந்தது.

பருவத்தின் கொடை சுமந்துபோகும் பெண்களை

எங்கு கண்டாலும் வழங்கிய பெரும் வள்ளன்மைக்காக

அவ்விடங்களிலேயே அவனைத் தொழுதேன்.

ஆன்மாவின் கூட்டிற்குள் ஒரு துளி ஒளி சொட்டி

வெளியும் கொள்ளாத காதலைத் திறந்தான்,

நோன்பிருந்து என் பொழுதுகளில் அவனைப் போற்றினேன்.




அவனே காமத்திலிருந்து உய்வித்தான் எனவே

அவன் அடிமையாய் தாசனாய் ஆராதகனாய் ஆகினேன்.

எனக்கொரு சின்னஞ்சிறு மகள் பிறந்தாள்

நானும் கடவுளுக்குரிய தகுதியடைந்துவிட்டேன்.
-யூமா வாசுகி கவிதை..
போட்டோ நான் எடுத்தது.. ? க. மோகனரங்கன் was tagged in Damodar Chandru's photo.



Sudhagar Sai to Yuma Vasuki Marimuthu
கவிதை...
நீ கல்லினுள் நீர்கிலுக்கம் -பாற்கடல் திரை அரவம்

வினோதாதீதம் -மேதமையுதயம்

அந்த சுரப்பிகள் ஈன்ற பரிமளம் - மழைத்துளிப் பழம்
அழகு ஆர்பரிக்கும் மந்தாரம்
என் துறையடைந்த சுடர்க்கூடம்
ஆகமத் தாமரைகள் ததும்பும் என் திருமுழுக்குத் தடாகம்
அமுதப்பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு

நீண்ட பொழுதெல்லாம் உனை நினைக்கும் நோன்பில்

நிகரற்றவனானேன் -மனதில்

உன் பிம்பகோவை பிரபந்தமாகிறது
-யூமா .வாசுகி