தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, September 26, 2012

பச்சைக் கனவு - லா சா ரா


www.azhiyasudargal.blogspot.com
முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு.

உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும், மேல், ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக் கொண்டே வந்து மோதிற்று... “ராமா ராமா ராமா, இன்னிக்கென்ன உங்களுக்கு? இப்போத்தான் கூடத்தில் உட்கார வைத்துவிட்டுப் போனேன். மறுபடியும் வெய்யிலிலே குந்திக் கொண்டிருக்கிறீர்களே! உங்களுக்கென்ன நிலாக்காயறதா?”

”நிலா” என்றதும் மற்றும் ஒரு நினைவு எழுந்தது. நடு நிலவில் வாசலில் கயிற்றுக் கட்டிலில் காத்துக்கொண்டு படுத்திருக்கையில், காத்திருந்த கைப்பிடி அவன் கைமேல் விழுவதும், தெருவின் திருப்பத்தில் நான்கு மண் குன்றுகளின் நடுவில் தேங்கிய குளத்திற்கு அழைத்துச் சென்ற எத்தனையோ முறைகளும், பாதத்தினடியில் தெருவின் பொடி மண் பதிவதும், பச்சையாடை காற்றில் ‘படபட’ என்று அடித்துக்கொண்டு அவன்மேல் மோதுவதும் இப்பொழுது போலிருந்தது.

“நிலவு பச்சைதானே?”

“பச்சையா? யார் சொன்னா வெண்ணிலாயில்லையோ?”

“முழு வெள்ளையா?”

“சுண்ணாம்பு வெள்ளையென்று சொல்ல முடியுமா? ஒரு தினுசான வெண்பச்சை...”

“ஆ, அப்படிச் சொல்லு...”

அது வேண்டுமானால் வெண்பச்சையாகயிருக்கட்டும். ஆனால் அவன் அதை முழுப் பச்சையாய்ப் பாவிக்கச் சற்று இடங்கொடுத்தாலும் போதும்.

கசக்கிப் பிழிந்த இலைச்சாறு போல், நிலவு குன்றுகளின் மீதும், புற்றரை மீதும், தாமரை வாவியின் மேலும் பச்சையோடு பச்சையாய் வழிவதாக நினைத்துக்கொள்வதில் ஒரு திருப்தி, அந்த நினைவில் சற்று நேரம் திளைத்துக் கொண்டிருந்துவிட்டு,

“வெய்யில் எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.

“ஐயையோ, இன்னிக்கு ஏன் ஒரு தினுசாயிருக்கேள்? வெய்யில் வெளுப்பாய்த்தானிருக்கும். உள்ளே வாங்க...”

”முழு வெளுப்பா?”

“முழு வெளுப்பு....”

ஆம், அவனுக்கு நினைவு தெரிந்தவரைகூட வெய்யில் வெளுப்புத்தான். அத்துடன் தகிப்பும்கூட. வெய்யிலும் பச்சையாயிருந்தால்!

சற்று நேரம் பொறுத்து அவன் எண்ணத்தை எதிரொலிப்பது போன்று, அவன் மனைவி கண்ணைப் பலமாய்ச் சிமிட்டிக் கொண்டு,

“வெய்யில் பச்சையாயிருக்கும் வேளைகூட உண்டு....” என்றாள்.

அவனுக்கு உள்ளூர அவாத் துடித்தது. வெய்யில் பச்சையாயிருப்பதில் தன் தலையையே நம்பியிருப்பது போல்.

அவன் மனைவி கண்ணைச் சிமிட்டும் சிமிட்டலில், ரப்பைகள் எகிறிவிடும்போல் துடித்தன.

“பச்சையான பச்சை! இலைப்பச்சை! நேற்று சாயங்காலந்தான் உங்கள் மச்சினன், பதினாலு ரூபாய் போட்டு வாங்கி வந்தான்; இதைப் போட்டுண்டு பாருங்கள்,”

“என்ன இது?”

“போட்டுக்கொள்ளுங்களேன் சொல்றேன் - வெய்யிலுக்கு குளுகுளுவென்று பச்சைக் கண்ணாடி. எல்லாம் பச்சையாய்த் தெரியறதோ?”

அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்பொழுதும் போல் அந்தகாரமாய்த்தானிருந்தது.

“அட! உங்களுக்கு ஜோராயிருக்கே!”

“என்ன?”

”மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டால் உங்களைக் குருடு என்று யார் சொல்லுவா?”

அவ்வார்த்தை சுருக்கென்று தைத்தது. உள்லதைச் சொன்னாலும், எவ்வளவு தூரம் தன்னைக் கேலி பண்ணுகிறாள் என்று புரியவில்லை. கண்ணாடியைக் கழற்றி வீசியெறிந்தான். அது கட்டாந்தரையில் பட்டுத் தெறித்து உடையும் சத்தம் இனிமையாய் ஒலித்தது.

“ஐயோ பதினாலு ரூபாய்! என்னத்தைச் சொல்லி விட்டேன் இவ்வளவு ஆத்திரம் பொங்க! இந்த வயசிலே உங்களுக்கு இத்தனை ஆங்காரம் வேண்டாம்!”

எந்த வயதிலே? வயதுண்டோ தனக்கு? அவள் நெறித்த சொடுக்குகள் விரல்களினின்று சொடசொடவென்று உதிர்ந்தன. “தன்னாலே ஒண்ணும் ஆகாவிட்டாலும் கோபம் மாத்திரம் மூக்கைப் பொத்துக்கொண்டு வருகிறது! காலையிலே கண்ணைத் திறந்தால் ராத்திரி கண் மூடறவரை, சகலத்துக்கும் கை பிடித்தே கொண்டு போய் விட வேண்டியிருக்கிறது. இத்தனை சிசுருஷையின் நடுவில் இத்தனையும் போறாது போல் வேளையில் பாதி நேரம் ஊமை, வாயைத் திறந்தால் நிலா பச்சையாயிருக்கா? வெயில் பச்சையாயிருக்கான்னு தத்துப்பித்தென்று கைக்குழந்தை மாதிரி கேள்வி...”

அவள் பழிப்பதெல்லாம் அவன் காதில் விழுந்ததா என்று சந்தேகம். அவன் நினைவு சட்டென்று இன்னொரு எண்ணத்தைத் தொட்டு அதில் முனைந்துவிட்டது.

ஊமையென்றதும் நினைவு, நேற்றிரவு கண்ட கனவில் ஊசிபோல் மறுபடியும் ஏறியது. மேற்கூறியவாறு, அவனாய்க் கற்பித்துக் கொண்ட பட்டை வீறும் பச்சை வெய்யிலில் பசும்புற்றரையில் நீட்டிய கால் தாமரைக் குளத்தில் சில் தண்ணீரில் நனைய அண்ணாந்து படுத்திருந்தான். அவன் பக்கத்தில் அவன் உறுப்பு உறுப்பாய்த் தொட்டு உள்ளந்திரிபு அற உணர்ந்தோர் உருவம் படுத்திருந்தது. கட்டவிழ்ந்து சரிந்த பசுங் கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி இது.

அவனையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம் போன்ற கண்கள் இவை.

நீங்காத மௌனம் நிறைந்து அம்மௌனத்திலேயே முழுகிப்போன வாய் இது.

அகன்ற மனதில் கிளர்ந்த ஆசை, வெளியும் வர இயலாது, உள்ளும் அடங்க இயலாது, முண்டிய மார்பு இது. பச்சை மேலாக்கினடியில் பட்டுப்போன்ற வயிறு இது.

அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயலுவது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தை இது...

“பச்சைக்குழந்தை? பச்சைக்குழந்தை!!...”

அவன் மனைவி அவன் கையைக் கரகரவென்று பிடித்திழுத்து, கூடத்தின் ஊஞ்சலில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். அப்படியே அவள் மெதுவாய் படுக்கையாய்ச் சாய்த்து, அவனை உட்கார வைத்து அதிர்ச்சியில் ஆடும் ஊஞ்சலுடன் மனதையும் அசையவிட்டுக்கொண்டு, பச்சையைப் பற்றி எடுத்த எண்ணத்தைத் தொடர முயன்றான்.

அவன் கண்ணிருக்கையில் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றிய அந்த வர்ணம் அவனுக்குப் பிடித்த வர்ணமாய், மனதைக் கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு விட்டது. அக்குன்றுகளிடையில் குளக்கரையில் அவன் பச்சையைப் பெற்ற பார்வையிழந்ததை நினைத்தான். அப்பொழுது என்ன வயதிருக்கும்? பத்திருக்குமா? அவ்வளவுதான்.

மல்லாந்து படுத்தவண்ணம் சூரியனைச் சற்றுநேரம் நோக்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு சுற்றும் முற்றும் இருப்பதைப் பச்சையாய்க் காணக் காண அவனுக்கு வியப்பாயிருக்கும். சூரிய ஜோதியில் கண்ணைத் திறந்து காண்பித்துவிட்டு புத்தகத்தை எடுத்துப் பிரித்தால் எழுத்துக்கள் பச்சைப் பச்சையாய் குதிக்கும். பொடிமணல் பச்சைப் பளீரடிக்கும். அது அப்பொழுது அவனுக்கு ஆனந்தமாயிருந்தது. யாருமறியா ஒரு புது விளையாட்டைத் தான் கண்டுபிடித்ததாய் நினைத்துக்கொண்டு விட்டான். அதைத் தானே தன்னந்தனியாய் அனுபவித்தான். அப்பொழுதுதான் ஒரு மாதத்திற்கு முன் தாயை இழந்த துக்கத்தைச் சற்றேனும் மறக்க இவ்விளையாட்டு அவனுக்கு ஆறுதலாயிருந்தது. ஆயினும் அவன் கண்டு பிடித்த மூன்றாம் நாளே, மாவிளையாட்டு தானே முடிவடைந்தது. சூர்ய கோளம் தாம்பாளம் போல் சுழன்று கொண்டே விட்டு விட்டு மின்னுவதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், கண் திடீரென்று இருண்டு பார்வை இழந்தது. சப்பாத்தியிலும் கத்தாழையிலும் விழுந்து எழுந்து தட்டுத்தடுமாறி உடலெல்லாம் முள்ளாய் அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தது. இன்னமும் நினைவிருக்கிறது.

தலைவாழை இலையில் விளக்கெண்ணெயைத் தடவி அவனை அதில் வளர விட்டிருக்கையில், அப்பா மண்டையிலடித்துக் கொண்டே கூடத்தில் முன்னும்பின்னுமாக உலாவுவது ஞாபகமிருக்கிறது, “மார்க்கடம் - மார்க்கடம்! உன்னைப் பெற்றாளே உன் தாயும்!”

என்னென்ன வைத்தியமோ பண்ணியும் பார்வை மீளவில்லை. ஏற்கனவே கண்ணில் கோளாறு இருந்திருக்கிறது. இனியொன்றும் இயலாது என்று பட்டணத்து வைத்தியனும் கைவிட்டுவிட்டான். செயலற்ற விழிகளைவெடுத்தவண்ணம் அவன் கூடத்துத் தூணில் சாய்ந்து கொண்டிருக்கையில், அப்பா மண்டையில் மறுபடியும் திரும்பத் திரும்ப அடித்துக் கொண்டார்.

“நன்னா வந்து சேர்ந்ததையா நமக்கென்று; என்ன பண்ணினாய்?” “சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!” நாக்கைப் பழிக்கிறார் - “வரா ஆத்திரத்தில் உன்னை அப்படியே தூக்கிச் சுவரில் அறைந்துவிடலாம் போலிருக்கிறது. உனக்கென்று எல்லாம் தேடி வருகிறதே! சூரியனைப் பார்க்கிற விளையாட்டு யார் சொல்லிக் கொடுத்தா, நம்ம சம்பந்திக்காரன்தானே! பெண்ணைத் தள்ளி வைச்சோம் என்கிற வயிற்றெரிச்சலில் என்ன வேணுமானாலும் செய்வான் அவன், மாப்பிள்ளையும் சரியான பித்துக்கொள்ளி - சொல்லு - நிஜத்தைச் சொல்லு - குட்டிச்சுவரே! என்ன பாவத்தைப் பண்ணினேனோ!-”

பாபம் பச்சையாயிருக்காதே?

பார்வையிழந்து முதல் பச்சையுடன் புழுங்கிப் புழுங்கி அவனுக்கே சொந்தமான தனி அனுபவத்தில் அவன் அவ்வர்ணத்திற்கே ஒரு தனி உயிர், உரு, குணம், உயர்வு எல்லாம் நிர்மானித்துக் கொண்டு விட்டான்.

அழகுப் பச்சையழகு!

எல்லோருக்கும் தெளியச் சொல்ல வரவில்லை. சொன்னாலும் யாரும் சிரிப்பார்கள், இப்பொழுது இவள் சிரிப்பது போல்.

அவள் அடுப்பில் கொள்ளிக் கட்டையைச் சரியாய்த் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள். கட்டையினின்றும் சிதறும் தணல் போல் அவள் மனம் கொதித்துக்கொண்டிருந்தது. ஊஞ்சலில் அவள் கணவன் அனாதைபோல் ஒடுங்கிப் படுத்திருக்கும் நிலைமை கண்டு ஒரு பக்கம் பரிதவித்தது. வாய் மூடியவண்ணம் அவரைச் சூழ்ந்த அந்தகாரத்தில் உறைந்து போய் விடுகிறார். தூங்குகிறாரா அல்லது யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறாரா? அப்படி என்ன ஒரு யோசனையோ?

ஏதோ, ஒரு சமயமில்லாவிட்டால் ஒரு சமயம் எரிச்சல் வந்தாலும் அவரால் ஒரு சமயமும் ஒரு விதமான துன்பமுமில்லை. கண் அவிந்தது முதல் ஒரு விதத்தில் வளர்ச்சி நின்று விட்டது போலும். எல்லோரைப் போல, கண்ணால் உலகைக் கண்டு அதனுடன் மூப்படையும் அநுபவம் அவருக்கில்லை. அதனாலேயே அவர் கேள்விகளும் செயல்களும் சில சமயங்களில், சமயமற்று சலிப்பை விளைவித்தன.

தாழ்வாரத்திலிட்ட பிரம்பு நாற்காலியில் சாய்ந்து கொண்டு குனிந்த தலை நிமிராது யோகத்தில் ஆழ்ந்தது போல் உட்கார்ந்திருந்தார். என்ன இருக்கிறது இவ்வளவு யோசனை பண்ண? கண்ணிருந்தாலே பொழுது போக மாட்டேன்கிறது. இவருக்குப் பார்வையில்லாமல், பேச்சுமில்லாமல் எப்படிப் பொழுது போகிறது?

மாலை முதிர்ந்து இருள், தோட்டத்தில் வாழை மரங்களிலும் வைக்கோற்போரிலும் கிணற்றடியிலும் வழிய ஆரம்பித்தது. வானம் அப்பொழுதுதான் தூக்கம் கலைந்ததுபோல், அதன் பல்லாயிரம் கண்கள் ஒவ்வொன்றாயும், ஒருங்கொருங்காயும் விழித்துச் சிமிட்ட ஆரம்பித்தன.

“கலத்தில் சாதம் போட்டிருக்கிறேன்; சாப்பிட வாங்கோ.”

”ஊஹூம்.”

”சாப்பிடாதபடி என்ன நடந்துவிட்டது? கண்ணாடி போனால் பீடை தொலைஞ்சது - நீங்க வாங்கோ.”

“இல்லை எனக்கு வேண்டியில்லை. வற்புறுத்தாதே; நான் மாடிக்குப் போகிறேன்.”

அவன் படிப்படியாய்த் தொட்டு மாடியேறுவதைப் பார்த்துகொண்டிருந்தாள். ஏதேது, இந்தத் தடவை கோபம் மீறிவிட்டாப்போல் இருக்கு! சமாதானப்படுத்த வேண்டியதுதான்.

மாடிக்குப் போய் ஜன்னலண்டை போட்டிருக்கும் குறிச்சியில் சாய்ந்தான். தென்றல் நெற்றி வியர்வை ஒற்றியது.

“கீச் - கீச் -”

இரவில் கண்ணிழந்து அவனைப்போலவே தன்னந்தனியான பறவை இடந்தேடியலைகிறது.

“கீச் - கீச் - கீச்”

கிளி, ‘பச்சைக்’கிளி.

அவள் மாடியேறி வரும் சத்தம் கேட்டது.

எதிரே மேஜை மீது டம்ளரை வைத்தாள்.

என்னது? பால். பசும்பால், பச்சைப்பால், அவன் குறிச்சி கையைப் பிடித்தவாறு மண்டியிட்டாற்போல் அவன் காலடியில் உட்கார்ந்தாள். அவள் விரல்கள் அவன் கைமேல் பட்டன.

மெதுவாய், “கோபமா?”

“இல்லையே!” நிஜமாகவே இல்லைதான். நேற்றிரவு கண்ட கனவு எழுப்பிய நினைவுகளுக்கு அவள் என்ன செய்வாள்?

“பின்னே ஏன் ஒரு மாதிரியிருக்கேள்?”

”நான் நேற்றிரவு ஒரு கனாக்கண்டேன். உன் மேல் கோபமில்லையென்றால் நம்பு, தப்பு என் மேல்.”

”இல்லை என் மேல்தான். உங்களுக்கே தெரியும்.”

“இல்லை, ஒருத்தருக்கொருத்தர் இப்படிப் பரிமாறிக் கொள்வதற்காக நான் சொல்லவில்லை. என்னைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நீயும் உன் தம்பியும் இப்படிக் கொஞ்சம் இடமாற்றலாய் எங்கேயாவது போய் இருந்துவிட்டு வாருங்களேன்.”

“அடேயப்பா, ரொம்ப ரொம்பக் கோவம் போல இருக்கு! எனக்குப் புகலிடம் ஏது? உங்களுக்கே தெரியும். நானும் தம்பியும் அனாதையென்று.”

“அந்த ஒரே காரணத்தால் உன்னை நான் கலியாணம் பண்ணிக்கொண்டது தப்புத்தானே! எனக்கு ஆதரவை முக்கியமாய் நினைத்து உன்னை மணந்தது உன்னை ஏமாற்றியது போல் தானே! உனக்குத் திக்கில்லாததை என் சௌகரியத்திற்காக உபயோகித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் நானும் திக்கில்லாதவன்தான், அதனால் என் காரியம் எனக்கே தெரியவில்லை.”

”அதெல்லாம் ஒண்ணுமில்லை,” என்றாள். குருடனைக் கலியாணம் பண்ணிக்கொள்ள திக்கென்றுதானிருந்தது. ஆயினும் அவளும் அவள் தம்பியும் மானமாய்க் காலம் தள்ளுவதே தவிப்பாயிருந்த சமயத்தில் தனக்கு இடம் அந்தஸ்து எல்லாம் கொடுத்துதவியதை மறக்க முடியுமா? எவ்வளவு நல்லவர்! கண்ணொன்றில்லை தவிர மற்றெதில் அவரிடம் குறை?

ஆயினும் அவள் மனதில் தோன்றியது நன்றியா அல்லது ஆசையா?

சே, என்ன சங்கடமான கேள்வியெல்லாம் கேட்கிறது இந்தக் குழந்தை!

கொஞ்ச நாழி ஜன்னலுக்கு வெளிப்பக்கமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தாள்.

“உனக்கு ஒரு மூத்தாள் இருந்தாள் என்று உனக்குத் தெரியுமோ?”

அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. தனக்கு மூத்தாளிருக்கும்படி அவருக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லையே! இன்னமும் இருக்கிறாளா? அவரைப் பற்றி அவளுக்கென்ன தெரியும்?

“எங்கள் கலியாணம் கிராமாந்தரக் கலியாணம். அவள் பிறந்த வீடு அடுத்த தெருவுதான். எனக்குக் கண் போவதற்கு முன்னாலேயே கலியாணம் நடந்துவிட்டது. என் தகப்பனார் வைதீகம். சாரதா சட்டம் அமுலுக்கு வரு முன்னர் அதைச் சபித்துக்கொண்டு நடந்த அவசரக் கலியாணம். எனக்கு அவளை என் கண்ணிருக்கையிலேயே சரியாய்க் கண்ட நினைவில்லை. எல்லாவற்றையும் மறைத்த ஓமப்புகையும் வைதீகக் கூட்டமும்தான் ஞாபகமிருக்கிறது.

ஆனால் கலியாணமான பிறகுதான் குட்டு வெளியாயிற்று. பெண்ணுக்குப் பேச்சுக் கொச்சையாய்க்கூட வரவில்லை. படு ஊமை. அத்துடன் படு செவிடு. குண்டு போட்டாலும் காது கேட்காது. அவள் பண்ணின பாவம், ஏக பாப ஜன்மங்கள்!

அப்பாவுக்கு சம்பந்திமேல் குரோதம் பிறந்துவிட்டது. தன் அவசரத்துக்குத் தகுந்தாப்போல், தன்னைச் சம்பந்தி ஏமாற்றிவிட்டதாக எண்ணிக்கொண்டு விட்டார். சீர்வரிசையெல்லாம் அப்படியே திருப்பினார். பெண்ணோ, பெண் வீட்டாரோ தன் வாசல் படி மிதிக்கக்கூடாது என்று தீர்த்துச் சொல்லிவிட்டார். எங்கப்பா முரடு, கிராமத்துக்குப் பெரிய மனுஷன் என்றும் பெயர். அப்புறம் கேட்பானேன்!

எனக்கென்ன அப்போ தெரியும்? அப்பா எனக்கு மறுமணம் செய்வதாக்கூட யோசித்துவிட்டார். ஆனால் அதற்குள் நான் என் கண்ணை அவித்துக்கொண்டது அவர் மூக்கை அறுத்தாற்போலாயிற்று.

என் மாமனாரும் சந்தோஷந்தானோ என்னவோ, “வேணும் அந்தப் பயலுக்கு, குருட்டு மாப்பிள்ளைக்கு ஊமைப் பெண் குறைந்து போயிற்றா?” என்று பதட்டமாய்ப் பேசிவிட்டார். இரு குடும்பங்களுக்குமிடையே வைரம் முற்றிற்று.

நான் -

குருடர்களின் உலகம் குறுகிவிடுகிறது. நினைத்தவிடம் போகமுடியுமா, வரமுடியுமா, நாலு பேருடன் இஷ்டப்பிரகாரம் சேர முடியுமா? எல்லோரும் எவ்வளவோ பிரியமாய் இருந்த போதிலும் அவர்களின் இரக்கம் ஏளனமாய்த்தான் படுகிறது. அவளுக்கிருப்பது எனக்கிருக்கிறதா?

ஆகவே, எப்பவும் நான் தன்னந்தனியன்தான். நான் வீட்டிலில்லாத வேளையில், வேலையில்லாத வேளையிலும், குளக்கரையில் உட்கார்ந்துகொண்டு கல்லை ஜலத்தில் விட்டெறிந்து கொண்டிருப்பேன். அதுதான் என் வீட்டுக்குக் கிட்ட; அங்கு ஒருவரும் வருவதில்லை. அந்த ஜலம் ஸ்னானத்திற்கு உபயோகமில்லை. நான் எதற்கும் பயனற்றுப் போன பிறகு பதுங்குமிடம் அப்பயனற்ற குளக்கரைதான்.

நான் அங்கே உட்கார்ந்துகொண்டு என்னென்ன நினைத்திருப்பேன் என்று கேட்டால் எனக்கு நிச்சயமாய்ச் சொல்லத் தெரியாது. வயது ஏற ஏற கூடவே ஊறும் வேதனை இன்னதென்று நிச்சயமாய் எங்கே தெரிகிறது?

ஒருநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

பின்னால் யாரோ நிற்பதுபோல் திடீரென்று தோன்றிற்று.

”யாரது?” பதில் இல்லை. பகீரென்றது. ஆனால் பயத்தால் இல்லை.

யாரது? என் மேல் ஒரு கை பட்டது. முரட்டுத்தனமாய் அக்கையைப் பற்றி இழுத்தேன். அவள் சாயும் கனம் தாங்காது அப்படியே நான் சாய்ந்தேன். பிடித்திழுத்த வேகத்தில் நிலையிழந்து அவள் என் மேல் விழுந்தாள். ஒரு பெரும் மூர்ச்சை எங்களிருவர் நினைவையும் அடித்துச் சென்றது. எனக்கு அப்பொழுது வயது பதினெட்டா?

யாரது? என்ன அர்த்தமற்ற கேள்வி என் கேள்வி?

அன்று முதல் நாங்கள் என்னென்ன பேசினோம்? என்ன பேச முடியும்? பேச என்ன இருக்கிறது? எங்கள் பச்சை நரம்பில் துடிக்கும் ரத்தத்தின் படபடப்புத்தான் எங்கள் பாஷை. நான்தான் பச்சை பச்சையாய் சொல்கிறேனே! எனக்கு இஷ்டமானதெல்லாம் பச்சையாய்க் காண விரும்பும் ஒரு இஷ்டத்தில், அன்று முதல் அவளுடன் கழித்த வேளைகளெல்லாம் பச்சையாயின. பச்சைப் பகல், பச்சையிரவுகள்.

நான் இப்பவும் யோசிக்கிறேன், நாங்கள் புல்லிய வேகத்திலேயே எங்கள் எலும்புகள் நொறுங்கி - இருவருக்கும் ஒரே சமயத்தில் ஏன் சாவு சிந்திக்கவில்லை? அச்சாவே புதுப்பிறப்பாயிருக்கும். அல்லது இரவிலோ பகலிலோ குறைவிலாது நடமாடும் பூச்சி பொட்டுக்கள் ஏன் பிடுங்கிக் கொல்லவில்லை? அல்லது துர்த்தேவதைகள், வாயிலும் மூக்கிலும் செவியிலும் ரத்தம் குபுகுபுக்க அறைந்து ஏன் எங்கள் உயிர் குடிக்கவில்லை?

விதி! விதி!! விதி!!!

இதெல்லாம் நிஜமாக நடந்திருக்க முடியுமா? ஒரு ஒரு சமயம் என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

நடக்கிறதே, என்ன சொல்கிறாய்? என்று அவள் உருவம் என் மனதில் பச்சையாய் எழுந்து அவள் ஊமை வாய் என்னைக் கேட்கிறது.

குளக்கரையில் பசும் புற்றரையில் நாள் தவறாது உட்கார்ந்து உட்கார்ந்து என்னுள் ஊறிய பச்சைத்தாபமே என்னையுமறியாது மாறி மாறித் தோன்றும் குருட்டுக்கனவாயிருந்ததாலோ? “ஓஹோ, நீ கண்டது குருட்டுக்கனவானால் நான் கண்டது ஊமைக் கனவா?” என அவள் உரு, என் காணாத கண்கள் காண, பேசாத வாயால் என்னைக் கேட்கிறது. எல்லாமே கனவாயின் பிற நேர்ந்தனவும் கனவா?

பின் நேர்ந்த நனவின் முந்தைய இரவு இப்பொழுது என் முன் எழுகிறது. சித்திரையின் சந்திரிகையாம் - ரொம்ப உசத்தியாமே? அப்படித்தானா?


நிலவின் ஒளி கூட கண்ணு உறுத்துமோ? ஏனெனில் என் மைமேல் இரண்டு சொட்டுக்கள் கண்ணீர் உதிர்ந்தன. என் கைகள் அவள் கண்களைத் தேடின. அவள் என் கைகளைப் பற்றித் தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள். அவள் பச்சை வயிறு ஏன் கொதித்ததோ? என் மேல் சாய்ந்திருந்த அவளுடல் விம்மிக் குலுங்கிற்று. அவளைவிட நான் துர்ப்பாக்கியசாலியா? என்னைவிட அவளா? யாரு அறிவார்? ஏனோ?

இன்றில்லாவிடினும் என்றேனும் நீ எனக்குச் சொல்ல வேண்டும். தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

எனக்கு இரண்டும் ஒன்றாயிருந்தது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலாகாது. தெருக்குறட்டில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா? தூங்குகிற சமயத்திலாவது உருவமற்ற உருக்கள் என் கண்ணுள் தோன்றி மறைகின்றன. என் பெண்டாட்டி ஏன் இன்று அழுதாள் என்ற கேள்வியே உருவமற்ற உருவாய் எனக்குத் தோன்றுகிறாற் போலிருக்கிறது. ஆகையால் நான் தூங்குகிறேனா விழித்துக் கொண்டிருக்கிறேனா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் அரை நினைவு நிலையில் வாசல் கதவை யாரோ தடதடவென்று அவசரமாய்த் தட்டினார்கள்.

“என்ன:-” என் தகப்பனார் அலறியடித்துக்கொண்டு உள்ளிருந்து ஓடிவந்தார்.

”சமாசாரம் கேட்டியோ? உன் நாட்டுப் பெண் திடீர்னு செத்துப்போயிட்டாளாம்” அப்பா மேல்துண்டு போட்டுக்கொள்ளவும் மறந்து அவசரமாய் அவர்களுடன் ஓடினார்.

நான் தெரியாத கண்ணைத் திறந்த வண்ணம், கட்டிலில் அசைவற்றுப் படுத்துக் கொண்டிருந்தேன். ஒரு விஷயம் நன்றாகப் புலனாயிற்று. விடிந்து விட்டது. ஆகையால் நான் விழித்துக் கொண்டுதானிருந்தேன். என் கண்ணில் பொட்டு ஜலம் கூட இல்லை. சற்று நேரம் பொறுத்து யாரோ இருவர் என்னைப் பிடித்து மாமனார் வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். எப்படிப்பட்ட மாப்பிள்ளை வருகை! கூடத்தில் பிணத்தைக் கிடத்தி இருந்தது. கையில் மண் செப்பில் அவள் குடித்தது போக பாக்கிச் சாறு எஞ்சியிருந்தது. அந்தச் செப்பைத் தொட்டேன். பிறகு அவள் உதட்டைத் தொட்டேன். பச்சையாய்த்தானிருக்க வேண்டும். வீட்டுக் கொல்லைப் புறத்தில் வைத்தியத்திற்காக வேண்டிய விஷப்பூண்டு ஏதோ பயிரிட்டிருக்கிறது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

விஷத்தை அப்படியே பொசுக்க முடியவில்லை. புது மணியக்காரர் ஊருக்குப் புதிசு. கொஞ்சம் பயந்த பேர்வழி, யாருக்கும் தெரியாமல் அவரே பக்கத்தூரிலிருந்து போலீஸ், டாக்டர் எல்லாம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். ரண வைத்தியர் பிணத்தின் வயிற்றைக் கிழித்தார்.

வயிற்றில் மூன்று மாதத்து சிசு.

ஊரே பற்றி எரிந்தது. அப்பா நடுங்கிப் போனார். இதைத்தான் தெரிவிக்க முயன்றாளோ? இதுதான் அவள் தெரிவிக்க முயன்றபோது எனக்குத் தெரியவில்லையோ? ஒருவேளை தெரியாமலிருப்பதே மேலென்று உயிரை மாய்த்துக் கொண்டாளோ? தெரிந்துதான் நான் என்ன செய்யமுடியும்? ஏற்கனவே குருடு. இத்துடன் பெரியவர்களின் ஆசி பெறாத குழந்தை பிறந்த அவமானத்தையும் சுமத்துவானேன் என்ற எண்ணமோ? இத்தனைப் பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ? நாங்கள் பாபத்தையிழைத்து விட்டோம் என்ற பயமா? இல்லை எங்கள் ரகசியம் எங்களிருவரோடு மட்டும்தான் இருக்கவேண்டுமென்று, அது பஹிரங்கமாகுமுன் அவள் இவ்வுலகை விட்டுப் புறப்படத் தீர்மானித்துவிட்டாளோ? இந்த உறவு உருப்படப் பிறக்கவில்லை என்று உணர்ந்தாளோ?

‘அந்தக் குழந்தை என்னுடையது’ என்று நான் சொல்லியிருந்தாலோ கதை முடிந்துவிடும் புதிர் போல், எல்லாம் வெளியாயிருக்கும். இந்த மூன்று மாதங்களும் ஊரின் பொது சொத்தாயிருக்கும். அவள் நினைவு எனக்கே சொந்தமாயிருத்தல்தான் எனக்கிஷ்டம். என் சுயநலத்தால், நான் பயந்தாங்கொள்ளியாயிருந்து விட்டுப் போகிறேன். அவள் பெயருக்கு விழுந்த களங்கம் நீங்காவிட்டாலும் பரவாயில்லை. உயிருடனிருந்த சமயத்தில் எங்கள் பாரத்தைக் குறைக்க யார் என்ன செய்துவிட்டார்கள்? செத்த பிறகு அவள் தலையில் பூச்சூடா விட்டால் பரவாயில்லை. உயிர் நிலையின் ஒரே மூச்சுப்போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம் - நான்தான்.

இருந்தும் ஓரொரு சமயம் என் மனம் அக்கொலையுண்ட குழந்தைக்கு ஏங்குகிறது. அது உயிருடன் இருந்தால் எனக்கு ஆறுதலாயிருக்குமோ?

இது எவ்வளவு அசட்டுத்தனமான யோசனை? எனக்கு உடனே தெரிகிறது. அது உயிருடனிருந்தால் அவளும் உயிருடனிருக்க மாட்டாளா? ஒன்றினின்று மற்றொன்றைப் பிரித்துச் சிந்திப்பது எவ்வளவு அர்த்தமற்று இருக்கின்றது? அவள் போனால் அக்குழந்தையும் போக வேண்டியதுதான். இம்மனத்தின் நிலையை என்னென்று சொல்வது?

அவள் மனதில் முடங்கிக் கிடந்த பாசம் எழுந்த ஆவேசத்தில் தொண்டையை முண்டியது. குறிச்சியில் சாய்ந்தபடியே அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

“நான் - நான் -”

திடீரென்று மனம் குழந்தை கனிவில், அது மானவெட்கத்தை விட்டது.

“இதுக்கென்ன நமக்கு வர வருஷம் குழந்தை பிறக்காதா?” என்றாள். அந்த யோசனை அவள் மனதில் உறுத்தும் குறைக்கு ஆறுதலளித்தது.

“ஆம். வாஸ்தவம்தான். ஆனால் பெண்ணாய்ப் பிறக்க வேண்டும். பெண்ணுக்கு நல்ல பேர் வைக்க வேண்டும்.-”

“என்ன பேர் வைப்போம்?” என்று ஆசையின் அதிசயிப்புடன் கேட்டாள்.

அவன் கண்கள் ஒளியைப் பெற்றன போல் விரிந்தன.

”பச்சை.”

சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் -சுரேஷ்குமார இந்திரஜித்

நன்றி : azhiyasudargal.blogspot.com/
சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் -சுரேஷ்குமார இந்திரஜித் வலையேற்றியது: அழியாச்சுடர்கள் ராம் | நேரம்: 7:47 AM | வகை: கதைகள், சுரேஷ்குமார இந்திரஜித்

நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் 'சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், என்ற நாவல் எழுதியிருந்த டோகுடோ ஷோனின் ஞாபகமே எனக்கு வந்தது. அதனால் அவரை விசாரித்து அவர்தான் இவர் என்று அறிந்து கொண்டேன். நான் விசாரித்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதை அவர் முகம் காட்டியது. 'நீங்கள் இந்தியாவா, ஸ்ரீலங்காவா ? ' என்று அவர் கேட்டார்.

SURESHKUMARA INDRAJITH
ராபர்ட் அகஸ்ஸி மொழிபெயர்த்திருந்த அவரின் 'சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும் ' நாவல் என்னை மிகவும் ஈர்த்திருந்தது. ஒரு சிறுமியின் இயற்கையான அறிவுக்கூர்மையும் சிருஷ்டிகரமும் அவரின் பெற்றோர், சுற்றத்தார், பள்ளி ஆசிரியைகள் ஆகியோரினால் நாசமாக்கப்படுகின்றது என்பதை வெவ்வேறு கோணங்களில் அந்நாவலில் அவர் சித்தரித்திருக்கிறார். நாவலில் வரும் சிறுமிக்குப் பெயர் கிடையாது. அவள் மனம் இயற்கையாக கட்டமைக்கப்படுவதைச் சுற்றியுள்ளவர்கள் காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கருத்துக்கள் ஆக்கிரமிப்பதையும், பள்ளிக்கூடங்கள் பயத்தை உருவாக்கி மதத்தைச் சாரும் மனத்தை உருவாக்குவதையும் ஆழமான பார்வையுடன் பார்த்திருந்தார். வீட்டின் பின்புறத்திலுள்ள நந்தவனத்தில் திரியும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அவர் சித்தரிக்கும் இடங்களில் இயற்கையான கவித்துவம் வெளிப்பட்டிருந்தது.
நான் டோகுடோ ஷோனிடம் இந்த நாவலை சிலாகித்துப் பேசினேன். தான் எழுதிய நாவல்களில் பிடித்தமான நாவலாக இதைக் கருதுவதாகவும், ஆனால் பெரும்பாலோர் 'சுழலும் காலம் ' என்ற நாவலையெ முக்கியமானதாகச் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் எழுத்துத்துறைக்கு வந்த விதம் பற்றிக் கேட்டேன். அவர் கூறியதின் சுருக்கத்தைக் கூறுகிறேன்.
நான் எழுத்தாளர் யாசுனாரி கவாபாட்டாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதன் விளைவாக எழுத முற்பட்ட எனக்கு என் ஆசிரியர் கரஷமாவின் வழிகாட்டல் உதவியாக இருந்தது. அவர் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் என் விருப்பத்துக்குரியனவாக இருந்தது. அவருக்கும் தெரிந்த எந்த ஒரு விஷயம் பற்றியும் கூர்மையான பார்வையுடன் வித்தியாசமாகப் பேசுவார். நான் எழுதியிருந்த கதையை முதலில் அவரிடம் காட்டியதும், அவர் அதை படித்துவிட்டு 'இந்த கதையைக் கிழித்து உன் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மலர்ச்செடியின் கீழே புதைத்துவிடு ' என்று கூறினார். சில நாட்கள் கழித்து என்னைக்கூட்டிக்கொண்டு மியூசியம் சென்றார். அங்கு இருந்த சிலைகள் அவர் சுட்டிக்காட்டிய பின்னே அவற்றினுடைய சிருஷ்டிகரம் என்னைத் தாக்கியது. அவர் கூடச் சென்று கொண்டிருக்கும்போது திடாரென்று ஒரு மரத்தையோ, செடியையோ கல்லையோ காட்சியையோ சுட்டிக் காண்பித்துப் பார்க்கச் சொல்லுவார். அவற்றின் அழகு என் மனத்தில் பதியத்தக்கதாக இருக்கும். அவர் கூட ஒரு நாள் சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு வாடகைக்கார் டிரைவர், அவரைப் பார்த்து ஓடிவந்தான். அந்த டிரைவர் தன்னுடைய குடும்ப விவகாரங்களை ஏற்கெனவே இவருக்குத் தெரிவித்திருப்பான் போலிருக்கிறது. மனைவியை இழந்த இரண்டு குழந்தைகளையுடைய அவனை மறுமணத்திற்கு உறவினர்கள் வற்புறுத்திக்கொண்டிருந்த போதிலும் மறுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. நோயுற்ற மனைவி உயிரோடு இருந்தவரை அவளது நலனுக்காகவும் தற்போது குழந்தைகளின் நலனுக்காகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளவனாகத் தோன்றினான். தியாகியாக பாவித்து இயங்கிக் கொண்டிருப்பது மனத்திற்கு சோர்வைத்தரும் என்றும், உட்புறமாக மறுமணத்தின் விருப்பத்தை மனம் வற்புறுத்திக்கொண்டேயிருப்பதால் வெளிப்புறத்தில் மனம் அதை மறுத்துக்கொண்டேயிருக்கிறது என்றும், மறுமணம் செய்வதின் மூலம் மனம் சோர்விலிருந்து விடுதலையடைந்து உற்சாகமுறும் என்றும் ஆனால் மறுமணத்திற்குப் பின்னாலும் ஏதாவது ஒரு தியாகத்தைத் தேடி மனம் அலைந்தால் அதை அவன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கரஷ்மா கூறினார்.

அவருக்கு பல வகையான மனிதர்கள் நண்பர்களாக இருந்தனர். எவ்வாறு இத்தனை வகையான மனிதர்களிடம் இவர் நட்புறவு கொண்டிருக்கிறார் என்று நான் ஆச்சரியமடைவதுண்டு. சமூகத்தின், அந்தஸ்து மிக்க மனிதர்கள், வட்டாரப் போக்கிரிகள், சிறு வியாபாரிகள், கெய்ஷா பெண்கள் என்று அவருடைய உலகம் பெரியதாக இருந்தது. ஒரு நாள் நான் அவரை காணச் சென்றிருந்தபோது வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். ஒரு கெய்ஷா பெண்ணைப் பார்க்கச் செல்வதாகக் கூறி, நான் மறுத்த போதும், விடாது என்னையும் கூட்டிச் சென்றார். கரஷீமா மீது மிகுந்த மரியாதையுடையவளாக அவள் தோன்றினாள். அவளுக்கு லெளகீகக் காரியங்களில் இவர் பல உதவிகள் செய்திருக்கிறார் என்று என்னால் யூகம் செய்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய பேச்சு, பிரதானமாக குழந்தைகளுக்கும், பெரியவர்கள், சூழல், சமூகம் ஆகியவற்றிற்கும் இடையேயான உறவைப் பற்றியதாக இருந்தது. ஒரு சுற்றுலா மையத்தில் மரங்கள் சூழ்ந்திருந்த குளக்கரையில் சிறுமியான தன் மகளுடன் அமர்ந்திருந்த போது, பளபளக்கும் நீரைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுமி கையில் இருந்த சிறு தட்டை அக்குளத்தில் மிதக்கும் படியாக வீசி எறிய வேண்டும் போல் இருப்பதாகத் தெரிவித்த சம்பவத்தை அப்பெண் கூறினாள். இதே போல் இன்னொரு நாள் டேபிள் வெயிட்டான கண்ணாடி கோளத்திற்குள்ளே செல்லவேண்டும் போல் இருப்பதாகக் கூறியதாகவும் மற்றொரு நாள் வண்ணத்துப் பூச்சிகளுடன் பறந்து திரியும் கனவு கண்டதாகவும் கூறியதாகவும், இவை எல்லாம் மனத்தின் சிருஷ்டிகர அடையாளங்கள் என்றும், இவற்றை நாசப்படுத்தும் சக்திகளே குழந்தைகளைச் சுற்றிலும் உள்ளதாகவும் அந்தப்பெண் தெரிவித்தாள். அனைத்து விஷயங்களிலும், பெரியவர்களின் கருத்து திணிக்கப்படும் நிலையில், குழந்தைகளின் இயற்கையான கூர்மை அறிவு நிலையில் சிதைக்கப்படுவதாக கரஷ்மா கூறினார். அந்தப்பெண்ணின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. இது நடந்த பலகாலம் ஆகிவிட்டது. கரஷ்மாவும் இறந்து விட்டார். இந்த உரையாடல் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த சிலபொருட்கள் அவற்றின் வடிவம், நிறம், அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணை ஆகியவை தற்போதும் அப்படியே நினைவில் உள்ளன. எழுத ஆரம்பித்தபின் இந்த உரையாடல் என்னை தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. கலை வடிவமாக எழுத இயலாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். தொந்திரவை தாள இயலாமல் எப்படியோ எழுத ஆரம்பித்து முடித்துவிட்டேன். அதுதான் நீங்கள் விரும்பும் 'சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் ' என்ற நாவல்.
- டோகுடோ ஷோனின் கூறியதின் சுருக்கத்தை மேலே கொடுத்திருக்கிறேன். அவரின் தொழில் பற்றி விசாரித்ததற்கு ஒரு எலக்ட்ரானிக் கம்பெனியில் பணிபுரிவதாகக் கூறி அது சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கூறினார். அதில் எனக்குச் சிறிதளவிற்கு மேல் எதுவும் விளங்கவில்லை. தவிர அவை இந்தக் கதைக்கு அவசியமானதுமல்ல.
***
மறைந்து திரியும் கிழவன், சிறுகதைத் தொகுப்பு 1993
***
நன்றி: திண்ணை


அவனுடைய நாட்கள்-வண்ணநிலவன்



கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததை அவனும் ஆவுடையும் பார்த்து விட்டார்கள். பேசாமல் அப்படியே வீட்டுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் ஆவுடை வீட்டுக்குத் திரும்பவில்லை. அவள் வராவிட்டாலும் பரவாயில்லை. அவனையும் வீட்டுக்குப் போக விட மாட்டாள். சங்கரனுக்கு அம்மா மேல் கோபம் கோபமாக வந்தது.


இன்றைக்கும் வேலை இல்லாமல் ஆட்கள் திரும்புகிறார்கள் என்றதுமே சங்கரனுக்குச்சந்தோஷமாக இருந்தது. ஆனால் ஆவுடைக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஏற்கெனவே இந்த வாரத்தில் இரண்டு நாள் வேலை இல்லை. இன்றோடு சேர்த்தால் மூண்று நாளாகிறது. வாரச் சம்பளம் குறைந்துவிடும். சனிக்கிழமை ரேஷன் வாங்க சிட்டை வட்டிக்காரனிடம்தான் போய் நிற்க வேண்டும்.


சங்கரனுக்கு சீக்கிரமாக வீட்டுக்குப் போய் சாப்பாட்டுச் சட்டியை வீட்டில் போட்டு விட்டு நிர்மலா வீட்டுக்குப் போக வேண்டும். இப்படியே திரும்பினால் பதினைந்து நிமிஷத்தில் நிர்மலா வீட்டுக்குப் போய் விடலாம். அங்கே போய் எப்படியும் ஒரு அரை மணி நேரமாவது சிலோன் ரேடியோ கேட்கலாம். முக்கியமாக நிர்மலாவிடம் பேசிக் கொண்டிருக்கலாம். நேற்று ராத்திரி கேபிள் டி.வி.யில் பார்த்த படத்தைப் பற்றிச் சொல்லுவாள். நிர்மலாவுடன் இருந்தால் வீட்டு ஞாபகமே வருவதில்லை. அவளுடன் இருக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. காபி கொடுக்கும்போது அவளுடைய விரல் பட்டால் விவரிக்க முடியாத பரவசம் ஏற்படுகிறது. ராத்திரி வீட்டுக்குத் திரும்பும் போதுதான் நரகத்திற்குப் போகிற மாதிரி இருக்கிறது. அந்த நாள் ஏன் முடிந்ததென்று இருக்கிறது.


தசரா ஆரம்பித்து மூன்று நாட்களாகி விட்டன. எல்லா கோயில்களிலும் தினசரி கச்சேரி நடக்கிறது. தெருவுக்குத் தெரு மைனர் பார்ட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு வெளியூர்களிலிருந்து கும்பம் ஆடுகிறவர்களையும் நையாண்டி மேளங்களையும் கொண்டு வந்திருந்தன. அம்மாதான் ஒன்பது மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தால் திட்டுகிறாள். அதற்காக கண் முழித்து தசரா பார்க்காமல் இருக்க முடியுமா என்ன ?


'எக்கா கம்பெனிக்கா போறீய... ? அதான் வேல இல்லியே, வீட்டுக்குப் போங்கக்கா... எதுக்குப் போட்டு வீணா அலையுதியோ... ? ' என்றாள் பாக்கியம்.


'இல்ல, போர்மேன் அண்ணாச்சியைப் பாக்கணும். அதான் போய்க்கிட்டு இருக்கேன் ' என்றாள் ஆவுடை. பாக்கியம் கொஞ்சம் தள்ளிப் போனதும், 'இவளுகளுக்கு என்ன வந்தது ? நான் எங்கியும் போறேன். ரோட்டுல போறவ பேசாமப் போக வேண்டியதுதான ? இவ கிட்டக் கேட்டுட்டுத்தான் ஒவ்வொண்ணுஞ் செய்யனும் போல இருக்கு ' என்றாள்.


'எதுக்கு அந்த அக்காவப் போட்டுத் திட்டுத ? வீணா அம்புட்டுத் தூரம் எதுக்கு அலையணும் வேலதான் இல்லையே. வீட்டுக்குப் போங்கண்ணு சொல்லுதா. இது ஒரு குத்தமா ? அவளைப் போயி கண்டமானைக்கிப் பேசுதீயே ' என்றான் சங்கரன்.


'இந்தானைக்கு ஒனக்கு ஊர் மேயப் போகணும். கம்பேனி லீவுன்னா ஒனக்குக் கொண்டாட்டம். இப்பிடி தெனசரி வேல இல்லன்னு வீட்டுக்குத் திரும்புதமேன்னு எனக்கு வயித்துல புளியக் கரைக்கி. '


சங்கரன் பேசாமல் தலை குனிந்து நடந்து கொண்டிருந்தான். கோபத்திலும் எரிச்சலிலும் ஆவுடையுடைய நடையின் வேகம் அதிகரித்தது. முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள். தூத்துக்குடி பஸ் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது.


அப்பா வேலையில்லாமல் வீட்டில் உட்கார்ந்து நாலைந்து வருஷமாகி விட்டது. சங்கரனையும் மூன்று பொம்பளைப் பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு ஆவுடை அநேகம் பாடு பட்டாள். எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் அவனையும் பொட்டு வெடிக் கம்பெனிக்கு தன்னோடு வேலைக்குக் கூட்டிக் கொண்டு போனாள். அவர்களுடைய வாரச் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடியது.


மாணிக்கம் சலூனில் சங்கரன் தினசரி பேப்பர் படிப்பான். சின்னப் பிள்ளையிலிருந்தே சிந்தாதிரிப்பேட்டை சந்தனுவின் சித்திர வித்யாலயா விளம்பரத்தைப் பத்திரிகைகளில் பார்த்து வருகிறான். சங்கரனுக்குப் பள்ளிக்கூடத்தில் கூட டிராயிங் வராது. ஆனாலும் சந்தனுவின் 'நீங்களும் ஓவியராகலாம் ' விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்து விட்டு எழுதிப் போட்டான். ஒரு வாரம் கழித்து மெட்ராஸிலிருந்து நீளமான கவர் ஒன்று வந்தது. முதன் முதலாக அவன் பேருக்கு வந்த அந்த கவரைப் பார்த்ததும் ரொம்பச் சந்தோஷமாயிருந்தது. அதை நிர்மலாவிடம் கொண்டு போய்க் காட்டினான். ஓவியம் படிப்பதற்கு எவ்வளவு பீஸ் கட்ட வேண்டும் என்றதும் ஓவியனாகிற ஆசையே போய் விட்டது. ஆனால், ரொம்ப நாள் வரை அந்தக் கவரை அப்படியே கசங்காமல் வைத்திருந்தான்.


இதே போல டிராப்ட்ஸ் மேன் ஆகலாம், விவசாயப் படிப்பை வீட்டிலிருந்தபடியே இலவசமாகக் கற்கலாம் என்றெல்லாம் ரிஷிவந்தியத்திலிருந்து ஒரு டுட்டோரியல் காலேஜ் விளம்பரம் வந்திருந்தது. ரிஷிவந்தியம் என்ற அந்த ஊரின் பெயரே சங்கரனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அங்கிருந்தும் விபரங்கள் எல்லாம் வந்தன. வழக்கம் போல அம்ம அதெல்லாம் வேண்டாமென்று சொல்லி விட்டாள்.


ஆவுடை வேகமாகப் போய் கொண்டிருந்தாள். அவள் பின்னால் சங்கரன் இஷ்டமே இல்லாமல் நடந்து கொண்டிருந்தான். கம்பெனி பக்கமிருந்து கிருஷ்ணன் தன் பழைய சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். இவன் தூக்குச் சட்டியுடன் போகிறதைப் பார்த்து ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்தான். நல்ல வேளையாக கிருஷ்ணன் இவனைப் பாராமலேயே போய் விட்டான். கிருஷ்ணன் இவனைக் கடந்து போகும் போது அவனிடமிருந்து மருந்து வாடை அடித்தது. கம்பெனியில் வேலை பார்க்கிறவர்கள் எல்லோருடைய உடம்பிலும் இந்த மருந்து வாடை அடிக்கும். எத்தனை சோப் போட்டுக் குளித்தாலும் அது போகவே போகாது.


கம்பெனியின் நீளமான காம்பவுண்டுச் சுவர் ஆரம்பமாகி விட்டது. சுவர் மீது வரிசையாக மைனாக்கள் உட்கார்ந்திருந்தன. நிர்மலா வீட்டில் கூட முன்பு மைனா இருந்தது. ஈஸ்டருக்கு ஒரு வாரம் இருக்கும் போது ஒரு நாள் காலை கூண்டில் செத்துக் கிடந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. நிர்மலா கூட அவ்வளவாக வருத்தப்படவில்லை. இவன்தான் ரொம்ப வருத்தப் பட்டான். பிறகு வெறும் கூண்டு மட்டும் வெகு நாளைக்கு அவர்கள் வீட்டில் உத்திரக்கட்டையில் தொங்கிக்கொண்டிருந்தது.


'ஏம்மா அதான் வேல இல்லன்னு ஆளுக திரும்பிப் போறாவ இல்ல. அப்பிடியே வீட்டுக்குப் போவ வேண்டியதுதான ? எதுக்கு இம்புட்டுத் தூரம் வீணா வந்து அலையுதியோ ? ' என்றார் வாட்ச்மேன் ஞானமுத்து.


'உள்ள அண்ணாச்சி இருக்காங்களா ? '


'அண்ணாச்சி ஆபீஸ் ரூம்ல இருக்காங்க. எதுக்கு ? '


'அவங்களப் பாக்கணும். '


'அவங்களப் பாத்து என்ன செய்யப் போறீயோ ? குளோரைடு லாரி வந்தாத்தான் வேலயே. '


'ஏதாவது கழிவு கிழிவு கெடந்தா பாக்கலாம்னுதான்... '


'கழிவுதான ? நீங்க கேக்கதுக்கு முந்தியே நேசமணி, அண்ணாச்சி கிட்டக் கேட்டுப் பாத்துட்டா. கழிவெல்லாம் ஒண்ணும் இல்லன்னு அண்ணாச்சி சொல்லிட்டாங்க. இன்னைக்கிச் சாயந்தரத்துக்குள்ள லோடு வந்துருமாம்... நாளைக்கு எப்பிடியும் வேல இருக்கும். போயிட்டு வாங்க. '


பின்னும் ஆவுடை தயங்கி நின்று கொண்டிருந்தாள். ஞானமுத்து தன் ஷெட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார். சங்கரன் தள்ளியே நின்று கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்து விட்டு ஆவுடை நடக்கத் தொடங்கினாள். சங்கரனும் அவள் பின்னால் போனான். இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.


வீட்டுக்கு வந்ததும் ஆவுடை தூக்குச் சட்டியை வைத்து விட்டுப் படுத்து விட்டாள். கொஞ்ச நேரத்திலேயே தூங்க ஆரம்பித்து விட்டாள். தங்கைகள் பள்ளிக்கூடம் போயிருந்தனர். அப்பாவையும் காணவில்லை. அம்மா தூங்கியதும் சங்கரன் புறப்பட்டான். சட்டை வேட்டியெல்லாம் கருமருந்து வாடை அடித்தது. வெயிலில் வந்ததால் அந்த நெடி அதிகமாக இருந்தது. வேறு சட்டை மாற்றலாமென்று கொடியி;ல் கிடந்த சட்டையை எடுத்து மோந்து பார்த்தான். அதிலும் மருந்து வாடை அடித்தது. இத்தனைக்கும் அது துவைத்த சட்டை. வீடு பூராவுமே கருமருந்து வாடை அடிக்கிற மாதிரி இருந்தது. சட்டையை மாற்றாமலேயே நிர்மலா வீட்டுக்குப் புறப்பட்டான்.

சுபமங்களா-நவம்பர்,1995

Thursday, September 20, 2012

சதுப்பு நிலம்- எம்.ஏ. நுஃமான்


சதுப்பு நிலம்- எம்.ஏ. நுஃமான்



noomanவலையேற்றியது: அழியாச்சுடர்கள் ராம் | நேரம்: 7:27 AM | வகை: எம்.ஏ.நுஃமான், கதைகள்


  அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது.  புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் அவன் உணர்ந்தான். புத்தகத்தில் குனிந்திருந்த தன் நெற்றியில், அவள் விழிப்பார்வை பட்டுச் சுடுவது போல் அவனுக்கு உணர்வு தட்டியது.

அவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான். ஆனால், அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தன் பாட்டில் புத்தகத்தைப் பார்த்து கொப்பியில் ஏதோ குறிப்பு எழுதிக் கொண்டிருந்தாள். அதே மேசையில் அவளைச் சுற்றி அவளுடைய தோழிகள் மூவர் அதேபோல் ஏதோ குறிப்பு எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரும் அவனைக் கவனிக்கவே இல்லை.

அவனுக்கு அது சிறிது ஏமாற்றமாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்ததை எண்ணியபோது அவனுக்குச் சிறிது அவமானமாகவும் இருந்தது. அவன் மீண்டும் அந்த மாதப் பத்திரிகையில் தலை குனிந்தான்.

தான் அவளைப் பார்த்ததை மற்றவர்கள் பார்த்திருக்கக்கூடும் என்று திடீரென அவன் நினைத்தான். மற்றவர்கள் தன்னைப் பிழையாக நினைப்பதை அவன் விரும்பவில்லை. யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று அவன் தலை நிமிர்ந்து சுற்றவும் பார்த்தான். யாருமே அவனைக் கவனிக்கவில்லை. எல்லோரும் தம்பாட்டில் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் புரட்டிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருந்தனர். எங்கும் அமைதியாக இருந்தது. தாள் புரளும் ஓசையைவிட மற்றபடி அறை மௌனமாகவே இருந்தது. சற்றுத் தள்ளி மேசைத் தொங்கலில் இருந்த அந்தக்கண்ணாடி போட்ட மனிதன் இடைக்கிடை காலை இழுத்து நீட்டுவதால், செருப்பு தரையில் உராயும் ஓசை மெதுவாகக் கேட்டது. தூரத்தே கல்லடிப் பாலத்தின் ஊடாகப் பஸ் ஒன்று போவது சன்னலின் ஊடே தெரிந்தது. கீழே பரந்து கிடக்கும் வாவியிலிருந்து வரும் காற்று மேல் மாடியில் மிகவும் இதமாக வீசியது.

அவன் மேல்மாடிக்கு ஏறி வந்தபோதுதான் அவளைக் கண்டான். எழுதுவதை விட்டுவிட்டு அவள்தான் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் மட்டுமில்லை; மேல் மாடியில் இருந்த எல்லோரும்தான் அவனை ஒரு கணம்பார்த்தார்கள். பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் வாசிப்பில் கவனத்தைப் பதித்துக் கொண்டார்கள். எல்லோரும் அவனைப் பார்த்ததும் அவனுக்குக் கூச்சமாக இருந்தது. அவன் வாசிகசாலைக்குப் பொருத்தமில்லாத சப்பாத்தை அணிந்திருந்தான். சப்பாத்தின் அடிப்பகுதியில் அடித்திருந்த இரும்பு லாடங்கள் சீமேந்துத் தரையில் டொக்... டொக்... என்று சத்தம் எழுப்பின. வாசிகசாலையின் அமைதியில் அந்தச் சத்தம் மிகவும் பெரிதாகக் கேட்பதுபோல் இருந்தது.

அவன் மிக மெதுவாக நடந்துவந்தான். மேசையில் கிடந்த ஒரு பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு தூண் ஓரத்தில் கிடந்த கதிரையில் உட்கார்ந்தான். அதுவரை அவள் அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். அவன் நடந்து வந்த மெதுமை அவளுக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும். பேனையின் மூடிப்பகுதி அவள் கன்னத்தில் பதிந்திருந்ததை அவன் கண்டான். அவள் இதழ்களில் ஒரு சிறிய நகை நெளிந்ததையும் அவன் கண்டான். பிறகு அவன் அந்தப் பத்திரிகையில் பார்வையைப் புதைத்துக் கொண்டான்.

அவளுடைய விழிகள் அவனைக் கவர்ந்தன. அவை மிகவும் அழகாக இருப்பதாக அவன் நினைத்தான். மீண்டும் ஒருமுறை அவளைப் பார்க்க வேண்டும் என்று அந்த நினைப்பு அவனைத் தூண்டியது. கையைத் தூக்கித் தலையின் முன் மயிரைத் தடவிவிட்டவாறே அவள்புறம் திரும்பிப் பார்த்தான். அவள் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருந்தாள். அந்த நாலுபேரிலும் அவள் மட்டும்தான் அழகாக இருப்பதாக அவன் நினைத்தான். பாடசாலை உடையில் அவள் அழகாகத்தான் இருந்தாள். பழுப்பு நிறமான வட்டமான முகத்திற்கு அவளுடைய சிறிது தடித்த சிறிய உதடுகள் கவர்ச்சியாக இருந்தன. அவள் அடிக்கடி கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு எழுதினாள். அதனால் அவள் இதழ்கள் ஈரமாக இருந்தன. அந்த இதழ்களின் ஈரப் பொழுபொழுப்பு அவனைக் கவர்ந்தது. அவளுடைய இரு காதுகளின் மேற்பகுதிகளும் கூந்தலுள் மறைந்திருந்தன. அவள் பின்னல்களில் ஒன்று தோளில் இருந்து வழுவி முன்புறம் விழுந்து கொப்பியின் மீது பட்டும் படாமலும் ஆடியது. அவள் அதை இடது புறங்கையால் ஒதுக்கிவிட நிமிர்ந்தபோது அவளுடைய கண்கள் அவனைச் சந்தித்தன.

அவனுக்குச் `சுரீர்’ என்றது. தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டதைக் கண்டதும் அவன் கண்கள் உயர்த்தி மேலே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு தனது மணிக்கூட்டையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னைப்பற்றி அவள் பிழையாக நினைக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பு அவனைச் சுட்டது. அவள் அவ்வாறு நினையாமலும் இருக்கலாம். அவளுக்கும் என்னைப் பார்ப்பதில் ஒரு கவர்ச்சி உண்டாகி இருக்கலாம். நான் அவளைப் பார்த்ததனால் கவர்ச்சிகொண்டு அவள் மீண்டும் என்னைப் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் நினைத்தான்.

எனினும் இனி அவளைப் பார்க்கக்கூடாது என்று அவன் உறுதி கொண்டான். தான் பார்க்காவிட்டாலும் அவள் தன்னைப் பார்ப்பாள் என்ற எண்ணத்தில் அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். கையில் இருந்த தமிழ்ப் பத்திரிகையைப் போட்டுவிட்டு ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொண்டான். அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால், சாதாரணமாக வாசிக்க முடியும். வாசிப்பது அரைகுறையாக விளங்கும். ஆயினும் அவன் அதை வாசிக்கத் தொடங்கினான். அடிக்கடி வாசித்ததை நிறுத்தி வாசித்ததை ஆழ்ந்து சிந்திப்பதுபோல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். எதையோ கண்டு மகிழ்ச்சியுற்றவன்போல முகத்தை மலர்ச்சி அடையச் செய்துகொண்டான்.

என்றாலும், `சே இது பெரிய கேவலம்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். சாதாரணமாக இருக்க முனைந்தான். காற்சட்டைப் பையில் இருந்த கைலேஞ்சியை எடுத்து முகத்தையும் கழுத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டான். பிறகு பத்திரிகையை வேகமாகப் புரட்டி அதில் உள்ள படங்களைப் பார்க்க முனைந்தான்.

ஆயினும், மனம் அலைபாய்ந்தது. அவள் இதற்கிடையில் தன்னைப் பார்த்திருக்கலாம் என்று அவன் கற்பனை பண்ணினான். இப்பொழுது அவள் என்ன செய்கிறாள்? உதட்டைக் கடித்துக் கொண்டிருக்கிறாளா இல்லையா? என்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. என்றாலும் அவன் பார்க்கவில்லை. தான் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டால் தன்னைப் பற்றிக் குறைவாக நினைப்பாள் என்று அவன் எண்ணினான். அது தனது ஆண்மைக்குப் பெரிய அவமானம் என்றும் அவன் கருதினான்.

அவள் யாராக இருக்கக்கூடும் என்றுகூட அவனுக்குத் தெரியாது. பள்ளி மாணவி என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. பள்ளி விட்டதும் புத்தகக் கட்டோடு வந்து ஏதோ குறிப்பு எடுக்கிறாள் என்பதும் தெரிந்தது. ஒருவேளை அவள், `அட்வான்ஸ் லெவல்’ படிக்கக்கூடும்; எங்கே படிக்கிறாளோ? வின்சன்தானே பக்கத்தில் இருக்கிறது. அங்கேதான் படிக்கக்கூடும் என்றெல்லாம் யோசித்தவாறே ஜன்னலூடு பார்வையைச் செலுத்தினான்.

பாலத்தின் ஊடாக ஒரு வைக்கோல் லொறி மெதுவாகப் போய்க்கொண்டிருக்கிறது. சன்னல் நிலைப்படியில் ஒரு அடைக்கலக் குருவி வந்து நின்று `கீச்’ என்று இருமுறை கத்தியது. பிறகு எங்கோ வெளியே பறந்து சென்றது.

பக்கவாட்டில் கதிரைகள் இழுபடும் சத்தம் கேட்டது. அவர்கள் போவதற்காக எழுந்துவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். அவளைப் பார்க்கக்கூடாது என்ற உறுதியுடன் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினான். செருப்புச் சத்தங்கள் மெதுவாக ஒவ்வொரு அடியாகக் கேட்டன. தான் பார்ப்பதனாலோ பார்க்காமல் விடுவதனாலோ தனக்கோ அவளுக்கோ என்ன வந்துவிடப் போகின்றது என்று அவன் நினைத்தான். இது தனது பலஹீனம்தான் என்று யோசித்தபோது அவளைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.

அவள் கீழே குனிந்துகொண்டு ஒவ்வொரு அடியாக இறங்கிச் சென்றாள். கீழே செருப்புகளின் ஓசை கேட்டு மறைந்தது. அவனுக்கு நெஞ்சில் சிறிது உறுத்தலாகவும் பாரமாகவும் இருந்தது. இது வெறும் அர்த்தமில்லாத உணர்ச்சி என்று அவன் நினைத்தாலும், அது அப்படித்தான் இருந்தது. அவள் பின்னலைத் தள்ளிவிடுவதற்காக நிமிர்ந்த அந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வாங்காது அவளுடைய கண்களை உற்றுப் பார்த்திருக்கலாம் என்று அவன் எண்ணினான். தான் பார்த்திருந்தால் அவளும் கண் கொடுத்திருக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அவளுடைய பொழுபொழுப்பான கன்னங்களும் ஈரமான உதடும் எண்ணெய் பூசாத கூந்தலும் அவன் கண்ணுக்குள் நின்றன.

அவள் இருந்த கதிரையை வெறித்துப் பார்த்தான். இப்போது யாரைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஏனென்றால், அவள் பார்க்கும் இடத்தில் அந்தப் பெண்கள் இல்லை. கதிரைகள் காலியாகத்தான் இருந்தன. எழுந்து அவள் பின்னாலேயே சென்று பார்ப்போமா என்று யோசித்தான். கூடவே, உடனே சென்றான். நான் அந்தப் பெட்டைகளைப் பார்ப்பதற்காகத்தான் அவர்கள் பின்னால் எழுந்து செல்கிறேன் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடும் என்ற எண்ணம் எழுந்தது.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். நாலரை மணி. ஐந்து மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் நிற்கவேண்டும். அவனுடைய சகோதரிக்கு நேற்று ஓப்பரேஷன் நடந்தது. அவளைப் பார்ப்பதற்காகத்தான் கல்முனையில் இருந்து காலையில் வந்தான். ஆறேகால் கல்லோயா எக்ஸ்பிரசில் திரும்பிப் போகவேண்டும். அவன் எழுந்து கீழே சென்றான். அவளும் தோழிகளும் பள்ளிவாசல் வாகையின்கீழ் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அவர்களைக் கடந்துபோக விரும்பவில்லை. இப்போது போனால், `தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இவன் வருகிறான்’ என்று ஒருவேளை அந்தப் பெட்டைகள் நினைக்கக்கூடும் என்று அவன் எண்ணினான்.

வாசிகசாலைக்கு வெளியே நாட்டி இருந்த விளம்பரப் பலகையை வாசிக்கத் தொடங்கினான்.

பொது நூல் நிலையம்

மட்டக் களப்பு.

திறந்திருக்கும் நேரம்....

மூடும் நேரம்.......

என்று ஒவ்வொன்றாக வாசித்தான். அது அலுத்தபின் வெறுமையாகக் கிடந்த கோட்டடியையும் தூரத்தெரிந்த கச்சேரி மதிலையும் நகரசபைக் கட்டிடத்தையும் பார்த்துக்கொண்டு நின்றான். விளையாட்டு மைதானத்தில் ஏழெட்டுப் பெண் பிள்ளைகள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவளும் தோழிகளும் தபால் கந்தோரடியால் நடந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் சிறிது தூரம் நடந்து பள்ளிவாசலடிக்கு வந்தான். அவர்கள் நெடுக நடந்து கொண்டிருந்தார்கள்.

`நெடுகப் போனால் அவளுகளைப் பின்தொடர்ந்து போவது போல இருக்கும். நாம் சென்றால் கொலிச்சால போவம்’ என்று அவன் குறுக்கு வீதியால் திரும்பி நடக்கத் தொடங்கினான். நெடுகவும் போய் இருக்கலாம் என்றும் ஒரு மனம் சொல்லியது. அவளுடைய இடை அசைந்து செல்லுவது மிகவும் அழகாக இருப்பதாக அப்போது அவன் நினைத்தான். ஆயினும் அவன் குறுக்கு வீதியால் நடந்து கொண்டிருந்தான். இவளுகளப் பாத்தாத்தான் என்ன? பாக்காட்டித்தான் எனக்கென்ன? என்று நினைத்தவாறே அவன் தன்பாட்டில் நடந்தான்.

`சே! எப்பவும் இப்பிடித்தான். நான் ஒரு மடையன்’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.


நன்றி : அன்று தேர்ந்த சிறுகதைகள் 1917_1981 ஓரியன்ட் லாங்மன் வெளியீடு

Share

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
4 கருத்துகள்:
 ராம் on 15 டிசம்பர், 2010 1:22 pm சொன்னது…
Dhalavai Sundaram Says : எனக்கு மிகவும் விருப்பமான கதை. நானும் ‘அன்று’ தொகுப்பில்தான் இந்தக் கதையைப் படித்தேன். படித்துவிட்டு, இதன் பாதிப்பில் ஒரு கதை எழுதியிருக்கிறேன். இவ்வளவு அற்புதமான கதைகள் எழுதிய நுஃமான் அதன்பிறகு கதைகள் எழுதாமல் போனது நல்ல கதைகளை விரும்புபவர்களுக்கு நஷ்டம்தான்

 tamil blogs on 15 டிசம்பர், 2010 7:12 pm சொன்னது…
தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

 கனாக்காதலன் on 15 டிசம்பர், 2010 7:47 pm சொன்னது…
நல்ல கதை. எல்லா காலத்திலும் இளைஞர்களின் உள்ளுணர்வுகள் என்னவோ ஒன்று போலவே இருந்திருக்கிறன போலும்.

 மதி on 15 டிசம்பர், 2010 8:03 pm சொன்னது…
நல்ல அருமையான காட்சி வெளிப்பாடு. நுணுக்கமாக ஒவ்வொரு நொடியையும் கண் முன்னே ஓட விட்டது இந்தக் கதை.... ஒரு சிறிய சராசரி நிகழ்வினுள் ஒளிந்து கொண்டிருந்த அருமையான உணர்ச்சிச் சலம்பலை அட்டகாசமாகச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்

'புத்தம் வீடு' புதினத்தின் அத்தியாயம் 5


8abf414a-3b05-49f3-9af7-a2d5b2cd4ffc


('புத்தம் வீடு' புதினத்தின் அத்தியாயம் 5)






































































































 
சிறைவாசம்-ஹெப்சிபா ஜேசுதாசன்



வலையேற்றியது: அழியாச்சுடர்கள் ராம் | நேரம்: 7:48 AM | வகை: கதைகள், ஹெப்சிபா ஜேசுதாசன்



வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது! சுயேச்சையாக ஓடியாடித் திரிந்து, நெல்லி மரத்தில் கல்லெறிந்து, குளத்தில் குதித்து நீச்சலடித்து, கூச்சலிட்டுச் சண்டை போட்டு, கலகலவென்று சிரித்து மகிழ்ந்து, எப்படி எப்படியெல்லாமோ இருந்த ஒரு குழந்தை பாவாடைக்கு மேல் ஒற்றைத் தாவணி அணிந்து கொண்டு, அது தோளிலிருந்து நழுவிவிடாதபடி இடுப்பில் இழுத்துக் கட்டிக் கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் எட்டிப் பார்க்கிற பரிதாபத்துக்கு இத்தனை சடுதியில் வந்து விடுகிறதே, இந்த வாழ்க்கைத் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!

அதோ அந்த அடிச்சுக் கூட்டிலிருந்து அப்படிப் பாதிமுகமாக வெளியில் தெரிகிறதே, அந்த முகத்துக்கு உரியவள் லிஸிதான். அந்தக் கண்கள் வேறு யாருடைய கண்களாகவும் இருக்க முடியாது. அவை அவளைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஆனால் அந்தக் கண்களில் குறுகுறுப்போ மகிழ்ச்சியோ துள்ளி விளையாடவில்லை. அவற்றில் படிந்திருப்பது சோகமா, கனவுலகத்தின் நிழலா சும்மா வெறும் சோர்வா என்பதுதான் தெரியவில்லை. தலையில் நன்றாய் எண்ணெய் தேய்த்து வாரியிருக்கிறாள். அவள் முகத்திலும் எண்ணெய்தான் வழிகிறது. மாநிறமான அந்த முகத்துக்கு ஒளி தந்து அழகு செய்வதற்குப் புன்னகை ஒன்றும் அதில் தவழவில்லை. லிஸியா அது? நம் லிஸியா? ஏன் இப்படிக் குன்றிக் கூசிப் போய் நிற்கிறாள்? ஏன்? ஏன்?

முதலாவது, லிஸி பெரிய வீட்டுப் பிள்ளை என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதை மறந்திருந்தீர்களானால் இதுதான் அதை மறுபடியும் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய தருணம். லிஸியும் ஒருபோதும் அதை மறந்து விடக் கூடாது. அவள் பெரிய வீட்டுப் பெண். பனைவிளை புத்தம் வீட்டுக் குலவிளக்கு. ஆகையால் அவள் பலர் காண வெளியில் வருவது கொஞ்சங்கூடத் தகாது. அது அவள் விலையைக் குறைப்பதாகும். இரண்டாவது, 'இற்செறிப்பு' ஒரு பழந்தமிழ் வழக்கம். சங்க காலத்திலேயே உள்ள வழக்கம். நல்லவேளையாக இது இன்னும் வெளிவராத இரகசியமாகவே இருந்து வருகிறது. பனைவிளை புத்தம் வீட்டார்க்குச் சங்க கால வழக்கங்கள் ஒன்றும் தெரியாது. அதற்குள்ள தமிழ் ஞானமும் அவர்களுக்குக் கிடையாது. ஆனால் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் மட்டும் நன்றாகத் தெரியும். லிஸிக்கு பதினான்கு வயது ஆகிறது. "பெரிய பிள்ளை" ஆகி விட்டாள். ஒற்றைத் தாவணி அணிந்துவிட்டாள். ஆகையால் இற்செறிப்பு மிகவும் அவசியமாகி விட்டது. நீங்கள் லிஸியின் முகத்தைப் பார்த்தால், அந்தக் கண்கள் மட்டும் உங்களிடம் "ஏன்? ஏன்?" என்று கேட்பது போலிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் போய்த் துயரப்படாதேயுங்கள். துயரப்பட்டால் தமிழ்நாட்டின் மற்ற பெண்மணிகளின் துயரங்களுக்கெல்லாம் எப்படிக் கணக்கெடுக்கப் போகிறீர்கள்?

அவள் என்னென்ன ஆசைகளை உள்ளத்தில் போற்றி வளர்த்து வந்தாள் என்று யாரும் கவலைப்படவில்லை. லிஸி வெறும் அப்பாவிப் பெண் ஒன்றும் அல்ல. முதலில் ரகளை நடத்தித்தான் பார்த்தாள். அழுது அடம் பிடித்தாள். அவளுக்குத் தெரிந்த முறையில் சத்தியாக்கிரகம் பண்ணினாள். ஆனால் இத்தனை பேரின் எதிர்ப்புக்கு இடையில் ஒரு குழந்தையின் பலம் எத்தனை தூரந்தான் போக முடியும்? அப்பனும் அம்மையுந்தான் போகட்டும். இந்தக் கண்ணப்பச்சியுங் கூட அல்லவா அவர்களுடன் சேர்ந்து கொண்டார்? கண்ணம்மையின் காரியம் கேட்கவே வேண்டாம். சித்தியாவது ஒருவாக்குச் சொல்லக் கூடாதோ? சித்திக்கு வழக்கம்போல வாய்ப்பூட்டு போட்டிருந்தது. மேரியக்கா இந்தத் தருணம் பார்த்துக் கிராமத்தில் இல்லை. மேரியக்கா பாளையங்கோட்டையில் இருக்கிறாள். காலேஜில் படிக்கிறாள். மேரியக்காவைப் படிக்க வைக்க அவளுக்குச் சித்தப்பாவோ மாமாவோ யார் யார் எல்லோமோ இருக்கிறார்கள். லிஸிக்கு யார் இருக்கிறார்கள்?

பள்ளிக்கூடத்துக்குத் தான் விட்டபாடில்லை. கோயிலுக்காவது விடக் கூடாதோ? நாலு தோழிகளை அங்கு சந்திக்கும் பாக்கியமாவது கிடைக்கும். கண்ணப்பச்சி கண்டிப்பாகச் சொல்லி விட்டார். "இப்ப எதுக்கு? மொதல்ல ரெண்டு பேராப் போவட்டும். நம்ம குடும்பத்திலே இல்லாத பழக்கம் நமக்கு என்னத்துக்கு?"

"ரெண்டு பேர்" என்று யாரை கண்ணப்பச்சி குறிப்பிடுகிறார் என லிஸிக்கு ஓரளவு தெரியும். ஆனால் அவள் வருங்காலத்தை விட நிகழ்காலத்திலேயே அக்கறை உடையவள். இரண்டு பேராகக் கோயிலுக்குப் போகலாம் என்ற நம்பிக்கை அப்போதைக்கு அவளுக்குத் திருப்தி தருவதாயில்லை. என்றாலும் இளம் உள்ளங்கள் எப்போதும் அழுதுகொண்டிருக்க முடியாது. எது முதலில் எட்டிக்காயாகக் கசக்கிறதோ அதுவும் நாளடைவில் பழக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையே உலக ஞானத்தைப் போதிக்கிறது. லிஸிக்குப் பள்ளிக் கூடம் இல்லாவிட்டால் என்ன? வீடு இல்லையா? தோழர், தோழியர் இல்லாவிட்டால் போகிறார்கள். மேரியக்கா தந்த மைனா இருக்கிறது. லில்லி, செல்ல லில்லி இருக்கிறாள். லில்லியோடு கொஞ்சிக் குலவுவதில் பொழுதில் பெரும்பகுதியும் கழிந்து விடுகிறது. அந்தச் சின்னத் தலையை மடியில் இட்டுக் கொள்வதில்தான் எத்தனை இன்பம்! வீட்டு வேலைகளும் அப்படி ஒன்றும் பாரமானவை அல்ல. தானாகச் செய்தால் செய்வாள். இல்லாவிட்டால் அம்மையும் சித்தியும் இல்லையா? லிஸி பெரிய வீட்டுச் செல்லப்பிள்ளை தானே? இப்படியாகத் தன்னை நாளடைவில் சமாதானம் செய்து கொள்ளுகிறாள் அந்தப் பேதைப் பெண். மேலும், பதவிக்காகப் போய் ஏங்கிக் கிடந்தாளே, வீட்டிலேயே அவளுக்கு மகத்தான பதவி காத்துக் கிடக்கிறது. கண்ணப்பச்சிக்குக் கண் மங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மை போன பிறகு, அதுவும் இரண்டு வருஷம் ஆகி விட்டது. கண்ணப்பச்சிக்குத் தனிமைத் துயரம் அதிகம். லிஸியின் துணையை இன்னும் கூடுதலாக நாடினார். இந்த ஒரு காரணத்தால்தான் லிஸிக்கு அடிச்சுக் கூட்டுக்கு வரும் உரிமை கிடைத்தது. ஆபத்துக்குப் பாவம் இல்லை அல்லவா? கண்ணப்பச்சிக்கு நினைத்த நேரம் பைபிளும், தினப்பத்திரிக்கையும் வாசித்துக் கொடுக்க வேறு யார் இருக்கிறார்கள்? ஆகையால் லிஸிக்கு அடிச்சக்கூட்டில் பெருமையுடன் நடமாடும் பதவி கிடைத்தது. அம்மைக்கும் சித்திக்கும் கிடைக்காத பதவி; அவர்கள் மாமனாருடன் பேசக் கூடாது. அவர்கள் கணவன்மார்களும் - சித்தப்பாவும் இப்படி ஆகிவிட்டாரே என தங்கள் தந்தையுடன் பேசுவதில்லை. லிஸிதான் அந்த வீட்டில் கண்ணப்பச்சிக்கு ஊன்றுகோல். அவளுக்கு அது புரியவும் செய்தது. அதனால் கண்ணப்பச்சியிடம் அவளுடைய பாசம் இன்னமும் அதிகமாயிற்று.

வீட்டிலுந்தான் என்னென்ன மாற்றங்கள்? 'ஆடு குழை தின்கிற' மாதிரி வெற்றிலை போட்டு வந்த கண்ணம்மை போய் விட்டார்களே! லிஸி வெற்றிலை இடித்துக் கொடுப்பாள் என்று அவள் கையைப் பார்ப்பதற்கு இப்போது யார் இருக்கிறார்கள்? ஆனாலும் அவள் வீட்டார் பல காரியங்களுக்காக அவள் கையை இன்னும் எதிர்பார்த்துத்தான் இருந்தார்கள். அதற்குக் காரணம் லிஸியேதான். லிஸி மேரியக்காவின் வீட்டிலிருந்து சில பாடங்களைக் கற்றறிந்தாள். கிராமத்து வீடானாலும் அதைச் சுத்தமாக வைக்கலாம் என்றறிந்திருந்தாள். ஏராளமாகக் குவிந்து கிடக்கும் பழ வகையறாக்களுக்கென்று ஓரிடம், கண்ணப்பச்சி மாட்டுக்கென்று சீவிப்போடும் பனம் பழக்கொட்டைகளுக்கென்று ஓரிடம், இப்படியெல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்திருந்தாள். ஈக்களின் தொல்லை இப்போது குறைந்துவிட்டது. அடிச்சுக்கூட்டுக்கு நேராகத் திறக்கும் ஜன்னலுக்கு ஒரு 'கர்ட்டன்' கூடத் தைத்துப் போட்டிருந்தாள். அது லிஸிக்கு மிகவும் சௌகரியமாயிருந்தது. யாராவது கண்ணப்பச்சியிடம் எப்போதாவது பேசுவதற்கென்று வருவார்கள். அப்போது வீட்டினுள் இருந்து கொண்டே எல்லாவற்றையும் பார்க்கலாம். வீட்டை இப்போது பார்த்தால் ஏதோ பெண்மணிகள் வாழும் இல்லமாகத் தோற்றமளித்தது. முன்பெல்லாம்... லிஸிக்கு இப்போது சித்தியிடம் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. சித்தியாவது வீட்டை கவனித்துக் கொள்ளக் கூடாதா? சித்திக்கு அழகாக ஸாரி கட்டத் தெரியும். பவுடரை நாசுக்காகப் பூசத் தெரியும். ஆனால் இந்த அம்மையிடம் ஒத்துப் போகக் கூடத் தெரியவில்லையே; கண்ணம்மை மரித்த பிறகு! சித்தியின் முகம் இப்போதெல்லாம் கவலை படர்ந்த இருள் சூழ்ந்திருக்கிறது. சித்தப்பா அடிக்கடி 'பிஸினஸ்' என்று சொல்லிக் கொண்டு, திருவனந்தபுரம் போய் வருகிறார். அங்கிருந்து யாராவது உறவினரைக் கூட அழைத்து வருவார், போவார். ஆமாம், அதற்காகவாவது வீட்டை நன்றாக வைத்திருக்க வேண்டாமா? உன் முற்றத்தில் பூத்துக்குலுங்குகின்ற ரோஜாச் செடிதான் எத்தனை அழகாயிருக்கிறது! லில்லியின் பட்டுக் கன்னங்களைப் போல் லிஸியின் பழைய நினைவுகளைப் போல். ஆனால் அதைப் பேண வேண்டுமானால் லிஸி மட்டுந்தான் உண்டு வீட்டில். வேறு யார் இருக்கிறார்கள்?

லிஸிக்கு சாமர்த்தியம் இல்லாவிட்டால் அப்பனை இப்படி வீட்டில் பிடித்து வைத்திருக்க முடியுமா? அவர் கள்ளுக்கடைக்குப் போவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் காப்பிக் கடைக்குப் போகிறதை நிறுத்தி விட்டாள். ஓட்டல் பலகாரம் வீட்டில் கிடைக்கும்போது அவர் எதற்காக ஓட்டலுக்குப் போகிறார்? அவரும் கண்ணப்பச்சியைப் போல லிஸியின் கையை எதிர்பார்த்துத் தானே இருக்கிறார்! இப்படியாக அவளுக்குப் பெருமையும் திருப்தியும் தரக் கூடிய விஷயங்கள் அறவே இல்லாமல் போகவில்லை. இல்லையானால் எப்படித்தான் வாழ்கிறதாம்?

இன்றைய வாழ்க்கையில் மிகமிகப் பிடித்த சமயம் பனையேற்றக் காலந்தான். அக்கானி அவள் விரும்பிக் குடிக்கும் பானம். அதில் விழுந்து செத்துக் கிடக்கும் ஈ, எறும்புகளை அவள் ஒருபோதும் அசிங்கமாகக் கருதினதில்லை. அவற்றை அகப்பையால் நீக்கி விட்டுக் கோப்பையை பானையில் இட்டு முகந்து குடிப்பாள். ஆனால், அதுவல்ல விஷயம். அக்கானிக் காலத்தில் அதைக் காய்ச்சுவதற்கென்று ஒரு கிழவி வீட்டுக்கு வருவாள். அவளுடன் பேசிக் கொண்டிருப்பது லிஸிக்கு நல்ல பொழுதுபோக்கு. அவள் எரிப்பதற்கென்று உலர்ந்த சருகுகளை விளக்குமாறு கொண்டு 'அரிக்கும்'போது லிஸியும் கூட நடப்பாள்; அவர்கள் வீட்டடிதான்; ஆகையால் அதில் ஒன்றும் கட்டுப்பாடில்லை. இந்தக் கிழவியின் மகன்தான் இவர்களுக்குப் பனையேறிக் கொடுப்பது. அவன் பெயர் தங்கையன். பனையேற்ற ஒழுங்குபடி ஒருநாள் அக்கானி தங்கையனைச் சேரும். தங்கையன் முறை வரும்போது அவனுடைய இளமனைவி அக்கானியை எடுத்துப் போக வருவாள். இவர்கள் குழந்தைகள் இரண்டு பேர். பிறந்த மேனியாகக் கூட ஓடி வருவார்கள். வாழ்க்கை வெறும் சப்பென்று ஆகி விடாதபடி இவர்கள் எல்லோரும் லிஸிக்கு உதவினார்கள்.

லிஸிக்கு வெளியுலகந்தானே அடைத்துக் கொண்டது? ஆனால் உள்ளே இவளுக்கென்று ஒரு தனி உலகம் உருவாகிக் கொண்டிருந்தது. பனையேறுபவர்கள் சடக் சடக்கென்று குடுவையைத் தட்டிக் கொண்டு வருவதும் பனையோலைகளின் இடையே வானத்தை எட்டிப் பிடிப்பதைப் போல் இருந்து கொண்டு 'அலுங்குகளை' அதாவது பனம் பாளைகளைச் சீவிக் கீழே தள்ளுவதும் ஒருவரையொருவர் கூவியழைத்து வேடிக்கை பேசிக் கொள்வதும் எல்லாம் சுவாரஸ்யமான காரியங்களே. பனையுச்சியிலிருந்து எந்தெந்த விஷயங்களெல்லாம் அலசி ஆராயப்படும் தெரியுமா? மன்னர் அரண்மனை இரகசியங்கள் தொட்டு ஹிட்லரின் ராணுவ காரியங்கள் வரையுள்ள விஷயங்கள் அடிபடும். லிஸி இப்போது பள்ளிக் கூடத்தில் படிக்கிற மாதிரிதான். தன் வீட்டு வாசலில் இருந்து கொண்டே பல புதிய பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

*****

'புத்தம் வீடு' - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல்.

லிஸியும் தங்கராஜூம் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்து போகின்றன. இடங்கள் மாறுகின்றன. மனிதர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் உறவாடுகிறார்கள். காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள். பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல்கிறார்கள். குலப்பெருமை பேசுகிறார்கள். புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுகிறார்கள்.

இது லிஸியின் கதை. மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள். அவளையே மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள்.

படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று. 'புத்தம் வீடு'. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது.

Thursday, September 13, 2012

அற்றைத் திங்கள் ..... பாரிமகளிர்

அற்றைத் திங்கள்
அவ் வெண் நிலவில்

எந்தையும் உடையேம்
எம் குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள்
இவ் வெண் நிலவில்

வென்று எறிமுரசின் வேந்தர்
எம் குன்றும் கொண்டார்
யாம் எந்தையும் இலமே

Monday, September 10, 2012




ஒரு வருடம் சென்றது - சா. கந்தசாமி



100-00-0000-100-9_b[நான்கு எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூலாகிய ‘கோணல்கள் ’ மூலம் பரவலான இலக்கிய ரசிகர்களின் கவனத்துக்கு வந்த சா. கந்தசாமி மாயவரத்தில் பிறந்தவர் (23-7-1940). தற்போது சென்னைத் துறைமுகத்தில் பணி புரிகிறார். இலக்கிய வட்டாரங்களில் பெரிதும் மதிக்கப்படும் ‘கசடதபற’ இலக்கிய இதழில் இவர் பெரும் பொறுப்பு வகித்தவர். தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காகச் சிறிய வனம் ஒன்று அழிக்கப்படுவது பற்றிய ‘சாயா வனம்’ (1969) என்ற நாவல் இவருடைய முக்கியமான நூல். ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ (சிறுகதைகள், 1974), ‘அவன் ஆனது’ (நாவல், 1981) ஆகியவை நூல் வடிவில் வந்துள்ள இவருடைய பிற படைப்புகள். படைப்பிலக்கியம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.]

ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்புக்குள் நுழைந்தான் ராஜா.

நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டுப்பாடம் எழுதிக் கொண் டிருந்தார்கள். இந்த அவசரம் ராஜாவுக்கில்லை. வீட்டுப் பாடத்தை அச்சடித்தாற் போல எழுதிக்கொண்டு வந்துவிட்டான்.

மணியடித்துப் பிரேயர் முடிந்த பின் வகுப்புத் தொடங்கும். அதற்கு இன்னும் நேரமிருந்தது. ராஜா வகுப்பின் நடுவில் நின்று அப்படியும் இப்படியும் பார்த்தான். பிறகு சற்றே குனிந்து சிலேட் டைப் பலகைக்குக் கீழே வைத்துவிட்டு, நழுவும் சட்டையை இழுத்துக் கட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டான்.

அவன் மேல்சட்டை கால்சட்டை எல்லாம் காக்கி. அதைத்தான் எப்போதும் போட்டுக்கொண் டிருப்பான். ராணுவத்தில் கொடுக்கப்படும் காக்கி அது. பிரித்துச் சிறியதாகச் சட்டை தைத்ததின் அடையாளங்கள் எப்போதும் அதில் தெரியும்! சண்டை வந்தால் சக மாணவர்கள் அவனிடம் அதைச் சொல்லிப் பரிகாசம் செய்வார்கள். அவர்கள் குரல் ஓங்க ஓங்க அவனுக்கு ஆத்திரம் வரும்; கோப‌ம் வ‌ந்தால் முக‌ம் வீங்கும்.வ‌ல‌ப்ப‌க்க‌த்திலிருந்து இட‌ப் ப‌க்க‌த்துக்கு வாய் கோண‌க் கோண‌ இழுக்கும்.ஏற்க‌ன‌வே அவ‌ன் தெற்றுவாய்.இப்போது சுத்த‌மா‌க‌ ஒரு வார்த்தையும் வ‌ராது.

"தெத்துவாயா"என்றுதான் சார் கூப்பிடுவார்.

சாருக்கும் அவ‌னுக்கும் ஒரு ராசி,கெட்ட‌ ராசி, ஒருத்தரை ஒருத்த‌ருக்குப் பிடிக்காது. ஆசிரிய‌ரைப் பார்க்கும் போதெல்லாம் த‌ன் த‌கப்ப‌னாரைப் பார்ப்ப‌து போல‌ இருக்கும் அவ‌னுக்கு. உறுமு வான். 'சாரைக் கொன்னு போடணும். நாற்காலியிலே முள்ளு வைக்க‌ணும். ந‌ல்ல‌ க‌ருவேல‌ முள்ளா,ச‌ப்பாத்தி முள்ளா கொண்டாந்து வைக்க‌ணும்.' என்று சொல்லிக் கொள்ளுவான்.இம் மாதிரியான சந்தர்ப்பங்களில் அவ‌ன் ந‌ட‌த்தை விப‌ரீத‌மாக‌ மாறும்.

சிலேட்டை எடுத்துத் த‌ரையில் அடிப்பான்.ப‌க்க‌த்தில் இருக்கிற‌ ‌வ‌ன் தொடையில் ந‌றுக்கென்று கிள்ளுவான். திடீரென்று பாய்ந்து ஒரு மாண‌வ‌ன் முக‌த்தில் பிராண்டுவான். ச‌ற்றைக்கெல்லாம் வ‌குப்பில் க‌ல‌வ‌ர‌ம் மூளும். மாண‌வ‌ர்க‌ளும் மாண‌விக‌ளும் ப‌ய‌ந்து மூலைக் கொருவ‌ராக‌ ஓடுவார்க‌ள்.

ஆசிரிய‌ர் பாய்ந்து வ‌ந்து ராஜா காதைப் பிடித்து முறுக்கி அடிப் பார். க‌ன்ன‌த்தில் கிள்ளுவார். பிர‌ம்பு ப‌ளீர் ப‌ளீரென்று த‌லையிலும் முதுகிலும் பாயும். அவ‌னோ வ‌லியையும் துய‌ர‌த்தையும் பொறுத்துக் கொண்டு மௌன‌மாக‌ இருப்பான். உட‌ல் அப்ப‌டியும் இப்ப‌டியும் நெளியும். ஆனால் க‌ண்களிருந்து ஒரு சொட்டு நீரும் பெருகாது. அதைப் பார்த்த‌தும் சாருக்குக் கோப‌ம் வ‌ரும். "பாரு,கொற‌ப்ப‌ய‌ அழ‌றானா?" என்று ப‌ல்லைக் க‌டித்துக்கொண்டு த‌லையைப் பிடித்து ம‌டாரென்று சுவ‌ற்றில் மோதுவார்.

இர‌ண்டு மாத‌ங்க‌ளாக‌ ராஜா அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வ‌ருகிறான். அவ‌ன் நினைவெல்லாம் மூன்றாம் வ‌குப்பிலிருந்து நான்காம் வ‌குப்புக்கு வ‌ந்த‌திலிருந்துதான் தொட‌ங்குகிற‌து.ம‌ற்ற‌தையெல்லாம் அவ‌ன் ம‌ற‌ந்துவிட்டான். ஓரோர் ச‌ம‌ய‌ம் கீழ் வ‌குப்புப் பிள்ளை க‌ளைப் பார்க்கும்போது,அந்த‌ வ‌குப்பெல்ல‌ம் தான் ப‌டிக்க‌வில்லை போலும் என்ற‌ உண‌ர்வு தோன்றும்.

நான்காம் வ‌குப்புக்கு வ‌ந்த‌துமே அவ‌னுக்கு அடி விழுந்த‌து. பிரேய‌ருக்கு நிற்கையில் பின்னாலிருந்து யாரோ நெறுக்கினார்க‌ள். வ‌ரிசை திடீரென்று உடைந்த‌து. நான்கு பேர் 'கேர்ள்ஸ்'மீது போய் விழுந்தார்க‌ள். பெண்க‌ள் 'ஓ'வென்று க‌த்தினார்க‌ள். ஆனால், உடைந்த‌ வ‌ரிசை ம‌றுக‌ண‌த்திலேயே ஒன்றாக‌க் கூடிய‌து. காலைச் சாய்த்து வைத்து நின்றுகொண் டிருந்த‌ எம்.ராமானுஜ‌த்தின் ச‌ட்டை யைப் பிடித்து,'ச‌ரியா‌ நில்லு' என்றான் ராஜா.அப்போதுதான் த‌லையில் ஓர் அடி விழுந்த‌து.த‌லை வேக‌மாக‌ப் பின்னுக்குப் போவ‌து மாதிரி இருந்தது. காது, கண், நெஞ்சு - எல்லாம் பற்றி எரிந்தன. காகை இருகப் பொத்தினான். பிரேயர் வரிசை, டீச்சர், பள்ளிக்கூடம், பிள்ளையார் கோவில் அவனைச் சூழ்ந்த ஒவ்வொன்றும் கிர்கிர்ரென்று வேகமாகச் சுற்றின.

ஆசிரியர் கையைப் பிடித்திழுத்து, "ஒழுங்கா நில்லு" என்று உறுமினார். அந்தக் குரல் தன் அப்பாவின் குரல் மாதிரியே இருந்தது. அவனுக்கு நெஞ்சு அடைத்தது.

எல்லா மாணவர்களும் அவனுக்கு இடம் விட்டு ஒதுங்கினார்கள். இரண்டு பேர் மூன்று பேர் நிற்கவேண்டிய இடத்தில் அவன் ஒடுங்கி நின்றான். கீச்சுக் குரலில் நான்கு பெண்கள், "உலகெல்லாம் உணர்ந்து" - என்ற பாட்டை இழுத்து இழுத்துப் பாடினார்கள். தலைமையாசிரியர் ராமசாமி ஐயர் சிறு பிரசங்கம் செய்தார்.

பிரேயர் முடிந்தது; அவன் வரிசை நகர்ந்தது. வகுப்புக்குள் காலடி வைத்ததுமே மாணவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடி இடம் பிடித்துக்கொண்டார்கள். ஆனணால் ராஜாவோ எல்லாருக்கும் வழிவிட்டுக் கடைசியாகப் போய்ச் சுற்றுமுற்றும் பார்த்தான். முன் வரிசைகள் நான்கு நிறைந்துவிட்டன. ஆனாலும் மூன்றாவது வரிசை யில் அவனுக்கொரு இடம் வைத்துக்கொண்டு சங்கரன், "ராஜா, இங்க வா!" என்று அழைத்தான். அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டுப் பின்னால் போய் உட்கார்ந்தான் ராஜா.

பிரேயரில் வாங்கிய அடியில் தலையும் காதும் இன்னும் எரிந்து கொண்டிருந்தன. காதை மெல்ல இழுத்துத் தடவிவிட்டுக் கொண் டான். அப்பா அடிக்கும்போதெல்லாம் அம்மா இப்படித்தான் செய் வாள் என்ற நினைப்பு வந்தது.

"ரொம்ப வலிக்குதாடா, ராஜா?" சங்கரன் அவன் அருகே வந்து குனிந்து கேட்டான்.

"இல்லே."

"அப்பவே பிடிச்சு காதைத் தடவிக்கிட்டே இருக்கிறியே!"

ராஜா, சங்கரனைக் கூர்ந்து பார்த்தான்.

"சார் வராங்க" என்று கத்திக்கொண்டு பின்னே இருந்து முன்னே ஓடினார்கள் சிலர். முன்னே இருந்து பின்னே சென்றார்கள் சிலர். சங்கரன் முன்னே போக ஒரு காலை எடுத்து வெத்தான். சார் நீண்ட பிரம்பைக் கதவில் தட்டிக்கொண்டே வகுப்புக்குள் நுழைந்தார். சங்கரன் ராஜாவின் பக்கத்தில் உட்கார்ந்தான். ஆனால், எட்டாம் நாள், "அந்த முரடன்கிட்ட குந்தாதே: என்று சார் அவனைப் பிரித்துக்கொண்டுபோய் முன்வரிசையில் உட்காரவைத்தார்.

"நான் ஒண்ணும் முரடனில்லே; நீதான் முரடன்; முழு முரடன்" என்று முணுமுணுத்தான் ராஜா. "சார் தலையில் சிலேட்டால் படீர் ப‌டீரென்று அடிக்க‌னும், காஞ்சொறி கொண்டாந்து அழ‌ அழ‌ தேய்க்கணும்' என்ற‌ உண‌ர்வு தோன்றிய‌து. ப‌ர‌ப‌ர‌க்க‌ச் சிலேட்டை யெடுத்துப் பெரிதாக‌ ஒரு ப‌ட‌ம் போட்டான். சாருக்கு இருப்ப‌து மாதிரி சிறிதாக‌ மீசை வைத்தான். மீசை வைத்த‌வுட‌னே கோப‌ம் வ‌ந்த‌து. குச்சியால் த‌லையில் அழுத்திய‌ழுத்திக் குத்தினான். க‌ண் க‌ளைத் தோண்டினான். கண்ணை மூடிக் கொண்டு கீர்கீர்ரென்று ப‌ட‌ம் முழுவ‌தும் கோடுக‌ள் கிழித்தான். குறுக்கும் நெடுக்குமாக‌க் கோடு க‌ள் விழும்போது ம‌ன‌தில் இன்னொரு காட்சி ப‌ட‌ர்ந்த‌து.

வீட்டில்,சாந்தா ப‌க்க‌த்தில் உட்கார்ந்திருந்தால் அப்பா வீட் டுக்குள் வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாக‌,'அந்த‌ முர‌ட‌ங்கிட்டே குந்தாதே அம்மா,இங்கே வா' என்று அவ‌ளைத் தூக்கி அணைத்துக் கொள் வார். ராஜா கீழ்க் க‌ண்ணால் த‌ங்கையையும் அவ‌ள் க‌ன்ன‌த்தில் குனிந்து முத்த‌மிடும் த‌க‌ப்ப‌னாரையும் பார்ப்பான். நெஞ்சில் என் ன‌வோ இட‌றுவ‌துபோல் இருக்கும். புத்த‌க‌த்தை அப்ப‌டியே போட்டுவிட்டு,"அம்மா"என்று உள்ளே ஓடுவாள்.அம்மா அவ‌னை அணைத்துக்கொண்டு கொஞ்சுவாள். அவ‌ன் தங்கையை நோக்கிப் 'ப‌ழிப்புக்' காட்டுவான்.

ராஜா சிலேட்டைத் திருப்பிப் பார்த்தான். சார் ப‌ட‌ம் கிறுக்க‌ லில் ம‌றைந்து போய்விட்ட‌து. ம‌ன‌த்தில் ஒருவித‌மான‌ ச‌ந்தோஷ‌ம் தோன்றிய‌து. சிலேட்டை ஒரு குத்துக் குத்திப் ப‌ல‌கைக்க‌டியில் வைத்துவிட்டு.'சார் நாற்காலியில் ஒரு நாளைக்கு முள்ளு வைக்க‌ ணும்' என்று த‌ன‌க்குத்தானே சொல்லிக்கொண்டு எழுந்தான்.

நாட்க‌ள் போக‌ப் போகத் த‌ன் த‌னிமையை அவன் அதிக‌மாக‌ உண‌ர்ந்தான்.அது துக்க‌த்தைக் கொடுத்த‌து. தெரியாத‌ க‌ண‌க்கைச் சொல்லித்த‌ர‌ ஆள் இல்லை; ம‌ன‌க்க‌ண‌க்குப் போடும்போது சிலேட்டை லேசாக‌த் திருப்பிக் காட்ட‌ ஆள்இல்லை. அவ‌ன் எழுதும் த‌மிழ்ப் பாட‌த்தைப் பார்த்தெழுத‌ யாரும் இல்லை. கைக‌ளை முறுக்கிச் சுவ‌ரில் குத்தினான் ராஜா.

ஆர‌ம்பிச்சுட்டியா?" என்று பிரம்பைக் காட்டி ஆசிரிய‌ர் உறுமி னார். அவ‌ன் க‌ண்க‌ளைத் தாழ்த்திக் கொண்டான்.

சார் ப‌த்து ம‌ன‌க்க‌ண‌க்குக் கொடுத்தார்.அவ‌னுக்கு எட்டுத் த‌ப்பு. அவ‌ன்தான் வ‌குப்பிலேயே ரொம்ப‌ த‌ப்புப் போட்டான்.

ஆசிரிய‌ர் அவ‌னைக் கூப்பிட்டு "எத்த‌னை த‌ப்பு?"என்று வின‌வினார்.

அவ‌ன் "ரெண்டு ரைட்."என்றான்.

சார் ஒரு சிரிப்புச் சிரித்தார்; கை காதைப் ப‌ற்றிய‌து.

"எத்த‌னை த‌ப்பு?"

"ரெண்டு ரைட் சார்."

"யாரைப் பார்த்து எழுதினே?"

"நானே போட்டேன் சார்!"

சார் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.

"யாரைப் பார்த்துக் காப்பி அடிச்சே?"

"நான் தனியாப் போட்டேன்,சார்."

"எனக்குத் தெரியும்! நிஜத்தைச் சொல்லு."

"நாந்தான் சார் போட்டேன்!"

"ஏலே, மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டியா?"

சார் பிரம்பு அவன் கழுத்திலும் தலையிலும் பாய்ந்தது. துள்ளிக் குதித்துக்கொண்டு பின்னுக்கு ஓடினான். அவன் காலடியில் இரண்டு சிலேட்டுக்கள் மிதிபட்டு உடைந்தன. சார் அவன் பின்னே ஓடிச் சட்டையைப் பிடித்து நிறுத்தினார்.

"உண்மையை உன் வாயாலேயே வரவழைக்காட்டா பார்" என்று கூவினார்.

"இன்னமெ ஓடுவியா?"

"......."

"வாயைத் திற!"முட்டிக் காலுக்குக் கீழே பிரம்பு சாடியது.

அவன் நெளிந்தான்.

"ஓடினா உடம்புத் தோலை உறிச்சுப்புடுவேன்."

"....."

"ஓடுவியா?"

"மாட்டேஞ் சார்!"

"கையை நீட்டு....நல்ல.."

உள்ளங்கையை விரிய நீட்டினான் ராஜா.

"முட்டிப் போடு."

அவன் முழங்காலிட்டு அவருக்கு நேரே கையை நீட்டினான். சார் அவனைக் குத்திட்டு நோக்கினார்.

"இப்ப நிஜத்தைச் சொல்லு,அந்த ரெண்டையும் யாரைப் பார்த்துப் போட்டே?"

"நானே போட்டேஞ் சார்!"

"சுவாமிநாத‌னைப் பாத்துத்தானே?"

"நானே சார்."

"நிஜ‌த்தைச் சொல்ல‌மாட்டே?" பிர‌ம்பு உள்ள‌ங்கையில் குறுக் காக‌ப் பாய்ந்த‌து.

அவ‌ன்,'நான்'என்று ஆர‌ம்பித்தான்.வாய் கோண‌க் கோண‌ இழுத்த‌து. அந்த‌ வாக்கிய‌ம் முழுதாக‌ வ‌ர‌வில்லை. முகம் வீங்க, ம‌ண்டியிட்ட‌ப‌டியே இருந்தான். சார் அடித்துக் க‌ளைத்துப் போனார். பிர‌ம்பைப் பின்னால் வீசியெறிந்துவிட்டு, "இரு,உன்னை ஒழிச்சிடுறேன்!" என்று பிட‌ரியைப் பிடித்து அவ‌னைத் த‌ள்ளினார்.

அவ‌ன் த‌ப்புச் செய்யும்போதெல்லாம் சிலேட்டைப் பிடுங்கி எறிவார். ச‌லிப்புற்று,"உன‌க்குப் ப‌டிப்பு வ‌ராது: மாடு மேய்க்க‌த் தான் போக‌ணும்"என்கிற‌போது,அவ‌ன் மௌன‌மாக‌த் த‌லை குனிந்த‌ப‌டியே நிற்பான். சார் நிமிர்ந்து பார்ப்பார். ம‌னத்தில் திடீரென்று எரிச்ச‌ல் மூண்டெழும்: "எதுக்கு நிக்க‌றே?போய்ஒழி" என்று க‌த்துவார்.

ஜூலை மாத‌ம் தொட‌ங்கிய‌திலிருந்து சார் பாட‌ம் ந‌ட‌த்துவ‌து குறைந்துகொண்டே வ‌ந்த‌து.ஒரு நாள்,ஐந்து க‌ண‌க்குக‌ள் கொடுத்துவிட்டுச் சென்ற‌வ‌ர் ம‌றுநாள் திரும்பி வ‌ந்தார். எல்லாரும் சிலேட்டை எடுத்துக்கொண்டு கூட்ட‌மாக‌ ஓடினார்க‌ள். ஆனால், சாரோ,புதிதாக‌ ஒன்ப‌து க‌ண‌க்குக‌ள் கொடுத்தார். "சிலேட்டிலே இட‌ம் இருக்காது சார்!"என்று ஒருவ‌ன் க‌த்தினான்.

"இருக்கிற‌ வ‌ரைக்கும் போடு" என்று வேக‌மாக‌ வெளியே சென்றார்.

ஐந்தாம் வ‌குப்பில் அவ‌ர் ப‌ட‌ம் போட்டுக்கொண் டிருப்ப‌தாக‌ மூன்றாம் நாள் வி.ஆர்.பாப்பா வ‌ந்து சொன்னாள்.அதை யாரும் ந‌ம்ப‌வில்லை. "கேர்ல்‌ஸ்" ப‌க்க‌த்திலிருந்து வ‌ந்த‌ த‌க‌வ‌லைப் "பாய்ஸ்" பொருட்ப‌டுத்த‌வில்லை.

ஆனால்,ம‌றுநாளும் ம‌றுநாளும் அதே செய்தி திரும்ப‌‌த் திரும்ப‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌து. ச‌ங்க‌ர‌னும் வேணுகோபால‌னும் ஐந்தாம் வ‌குப்பு ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌மாக‌ப் போய்ப் பார்த்துவிட்டு வ‌ந்தார்க‌ள். அப்புற‌ம் தான் அது நிஜ‌மென்று ஊர்ஜித‌மாயிற்று.சார் ப‌ட‌ம் போட்டுக் கொண்டிருப்ப‌து தெரிந்த‌வுட‌னே பாட‌ம் எழுதுவ‌தையும் க‌ண‌க்குப் போடுவ‌தையும் விட்டுவிட்டார்க‌ள்.

ராஜா ஐந்தாம் வ‌குப்பு ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌மாக‌ச் சென்று பார்த்தான். சார்,மேசைமீது நின்றுகொண்டு உய‌ர்ந்த‌ வெள்ளைச் சுவ‌ரில் பெரிதாக‌ ம‌ர‌ம் போட்டுக் கொண்டிருந்தார்.ம‌ர‌த்துக்கு அப்பால் இன்னொரு ம‌ர‌ம்;ச‌ற்றுச் சிறிய‌து.இப்ப‌டியேஒரு ப‌த்துநூறு ம‌ர‌ங்க‌ள். ஒரு பெரிய‌ வ‌ன‌ம்.வ‌ன‌த்தின் ஒரு ப‌க்க‌த்திலிருந்து பைச‌ன் எருமை உட‌ம்பைக் குலுக்கிக்கொண்டு த‌லை குனிந்த‌வாறு சீறிக்கொண்டு வ‌ந்த‌து. ராஜா க‌ண்க‌ளைத் தாழ்த்திப் பார்த்தான். அவ‌னுக்குப் ப‌ட‌ம் ரொம்ப‌ப் பிடித்திருந்த‌து.முத‌ல் முறையாக‌ த‌ன்னுடைய‌ ஆசிரிய‌ரைக் கொஞ்ச‌ம் சிர‌த்தையோடு க‌வ‌னித்தான்.அவ‌ர் கை வேக‌மாக‌ உய‌ர்ந்து தாழ்ந்துகொண் டிருந்த‌து. பெருங் கிளைக‌ளி லிருந்து சிறு கிளைக‌ளும்,சிறு கிளைகளிலிருந்து த‌ழைக‌ளும் தோன்றின‌.

இந்த விந்தையைக் காண ராஜா ஒவ்வொரு நாளும் ஐந்தாம் வகுப்பு ஜன்னலோரம் சென்றுகொண் டிருந்தான்.

பல நாட்களுக்குப் பிறகு, ஐந்தாம் வகுப்பு முழுவதும் பெரிய பெரிய படங்கள் வரைந்துவிட்டுச் சார் தன் வகுப்புக்கு வந்தார். வகுப்பு அலங்கோலமாகவும் ஒழுங்கற்றும் இருந்தது. ஆனால், அவர் இதையெல்லாம் கவனிக்கவில்லை.வெள்ளைச் சுவரை அங்குமிங்கும் தொட்டும் தட்டியும் பார்த்தார். திருப்தியாக இருந்தது.

ராஜா உட்காருகிற இடத்துக்கு மேலே பெரிதாகச் சுவரை அடைத்துக்கொண்டு காந்தியின் படத்தை வரைந்தார். பொக்கை வாய்க் காந்தி; அதில் லேசான சிரிப்பு; சற்றே மேல் தூக்கிய கை; அறையில் சிறு துண்டு; இடுப்பிலிருந்து ஒரு கடிகாரம் செயினோடு தொங்கியது. இவ்வளவையும் ரொம்பப் பொறுமையாக மெல்ல மெல்ல வரைந்துகொண்டு வந்தார்.

சார் படம் வரைய ஆரம்பித்தவுடனே வகுப்பில் பாடம் நடப்பது நின்று போயிற்று. மாணவர்கள் அங்குமிங்குமாக உலாவிக்கொண் டிருந்தார்கள். கூச்சல் பொறுக்க முடியாமல் போகும்போது, "வரணுமா?"என்று கத்துவார். இரைச்சல் திடீரென்று அடங்கி அமைதியுறும்.

காந்தியின் படத்தை முடித்துவிட்டு,சார் ஒரு கொடி வரைந்தார். மூவர்ணக்கொடி; காந்தி படத்தைவிடக் கொஞ்சம் சிறியது; ஆனால் உயரமானது. காற்றில் படபடத்துப் பறப்பது மாதிரி ஒரு தோற்றம். கொடியில் முதலில் ஆரஞ்சு;அப்புறம் வெள்ளை,நடுவில் நீல நிறத்தில் சக்கரம். இவையெல்லாம் பூர்த்தியான மூன்று நாள் கழித்து,கொடியின் கீழே பச்சை வர்ணம் தீட்டப்பட்டது.சக்கரம் போடும்போது தலைமையாசிரியர் ராமசாமி ஐயரும் கமலம் டீச்சரும் வந்தார்கள்.

சார் மேசையிலிருந்து கீழே இற‌ங்கினார்.

"சாப்பாட்டுக்குக் கூடப் போகல போல இருக்கே,சந்தானம்?" என்று கேட்டார் தலைமையாசிரியர்.

"ரெண்டு ஆரம் இருக்கு.அதை முடிச்சிட்டுப் போகலாம்னு இருக்கேன்"

தலைமையாசிரியர் திருப்தியுற்றார்."எட்டுப் பள்ளிக்கூடத்தைப் பார்த்துட்டேன்.நமபளதுதான் முதல்லே நிக்குது.இதுக்குக் காரணம் நீங்கதான்.

சார்,கமலம் டீச்சர் பக்கம் சற்றே திரும்பினார்.

"இது என் டியூட்டி சார்"

"சார்,நம்ப கிளாசைத்தான் கவனிக்கிறது இல்லை"என்றாள் கமலம் டீச்சர்.

"எனக்கு எங்கே நேரம் இருக்கு டீச்சர்?"

ராமசாமி ஐயர் தலையசைத்தார்.

"அவருக்கு நேரமே இல்லே அம்மா."

கமலம் டீச்சர் சிரித்துக் கொண்டே படி இறங்கினாள்.

ஒரு நாள், படமெல்லாம் போட்டு முடித்த பிறகு எல்லா மாணவர் களையும் அருகே கூட்டிவைத்துக் கொண்டு, "நமக்குச் சுதந்திரம் வருகுது, தெரியுமா?"என்று கேட்டார் ஆசிரியர். அவ‌ர் குரலில் தென்படும் உணர்ச்சி பாவத்தைக் கண்டு எல்லோரும் த‌லையை அசைத்தார்கள்.

"நமக்குச் சுதந்திரம் பதினைந்தாம் தேதி வருகுது. இதுதான் முதல் சுதந்திரதினக் கொண்டாட்டம். ரொம்ப விமரிசையாக் கொண்டாடணும். ஆளுக்கு ஒரு ரூபா கொண்டாங்க."என்றார் ஆசிரியர்.

அடுத்த நாளிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் பேர்கள் கூடிக் கொண்டே வந்தன. ராஜா ஐந்தாவதாகப் பணம் கொடுத்தான். தெத்துவாய் என்றெழுதிய சார், சட்டென்று அதனை அடித்துவிட்டு ஆர்.ராஜா என்றெழுதினார். பின்னால் ஒருநாள் மாலையில் எல்லா மானவர்களையும் அருகே உட்கார வைத்துக்கொண்டு,"ஆளுக் கொரு கொடி கொண்டு வரவேணும்" என்றார். அதோடுகூடக் கொடியின் நிறங்கள்,அதன் வரிசை,நீள அகலங்களைப் பற்றி விவரித்தார்.உள்ளே இருக்கும் சக்கரத்தின் ஆரங்கள் இருபத்து நான்காக இருக்கவேணும் என்றார்.

"துணிக்கொடி கொண்டாரலாமா சார்?"என்று கேட்டான் சங்கரன்.

ஆசிரியர் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு"இல்லே,காகிதக் கொடிதான்"என்றார்.

வகுப்பை ஜோடிக்கும் வேலை சங்கரனோடு ராஜாவுக்கும் கிடைத்தது.அதை மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டான். பனை-தென்னங்குருத்துக்கள் வெட்டித் தோரணங்கள் முடைந்து குவித்தான்.பதினான்காம் தேதி மாலை வெகுநேரம் வரையில் அவனுக்கு வேலை இருந்தது.கமலம் டீச்சரோடு சேர்ந்துகொண்டு கலர்க் காகிதங்கள்,ஜிகினாக் காகிதங்கள் எல்லாம் ஒட்டினான்.அவன் வேலை செய்த பரபர‌ப்பையும், சாதுரியத்தையும் கண்ட கமலம் டீச்சர்,"உன் பெயரென்ன?"என்று வினவினாள்.அவன் வேலையில் ஆழ்ந்தபடியே,"ஆர்.ராஜா"என்றான்.

மறுநாள் பொழுது விடிந்தது.ராஜா புத்தாடை அணிந்துகொண்டு மொட மொடக்கும் கொடியைக் கவனமாகத் தூக்கிப் பிடித்தவாறு பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றான். வடக்குத் தெருவைத் தாண்டும்போது வாத்தியார் வருவது தெரிந்தது. அவன் சற்றே பின்வாங்கிக் குறுக்கு வழியில் சென்றான். பள்ளிக்கூடம் பிரமாதமாக இருந்தது. இது தான் படிக்கும் பள்ளிக்கூடந்தானா என்றுகூட ஆச்சரியமுற்றான்.

பெரிய காரிலிருந்து ஒருவர் இறங்கி வந்து மெல்ல கொடியேற்றி னார். கொடி மேலே சென்றதும் தலைமை ஆசிரியர் கயிற்றை அசைத்தார்.ஏற்கனவே கொடியில் முடிந்திருந்த ரோஜா இதழ்கள் சிதறிப் பரவின. எல்லாப் பிள்ளைகளும் உற்சாகமாக‌க் கைதட்டி னார்கள்.

'தாயின் மனிக்கொடி பாரீர்'என்று கமலம் டீச்சர் உச்ச ஸ்தாயில் பாடினாள். அவள் குரல் கணீரென்று வெகு தூரம் வரை யில் கேட்டது. ராஜா விரலை ஊன்றி எழும்பி நின்று இசையைக் கேட்டான். விழா முடிந்ததும் அவளிடம் ஓடிப்போய்."டீச்சர், உங்க பாட்டு ரொம்ப நல்லா இருந்திச்சு டீச்சர்" என்றான்.

கமலம் டீச்சர் வியப்போடு கண்களைத் தாழ்த்தி அவனைப் பார்த்தாள்.

"நீ எந்த வகுப்பு?"

"ஃபோர்த் பி"

"அடுத்த வாரம் என் கிளாஸ்க்கு வந்துடுவே."

அவனுக்கு அது தெரியாது.மௌனமாக இருந்தான்.ஆனால் அடுத்த வாரம் அவன் சார் மாற்ற‌லாகிப் போனார்.நான்காம் வகுப்பு "பி"."ஏ"யுக்குச் சென்றது. அவன் வகுப்புக்குள் நுழைந்த போது கமலம் டீச்சர் என்னவோ எழுதிக்கொண் டிருந்தாள்.

முதல் இரண்டு நாட்களிலும் டீச்சர் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் நாள் வீட்டுப் பாடத்தைக் கொண்டுபோய்க் காட்டியபோது குண்டுகுண்டான எழுத்தைப் பார்த்துவிட்டு நிமிர்ந்த டீச்சர் சற்றுத் தயங்கினாள். நினைவைக் கூட்டினாள்.அப்புறம் புன்சிரிப்புடன், "ராஜாதானே?"என்று கேட்டாள்.

"ஆமாம்.டீச்சர்."

"அன்னிக்கு என் பாட்டைப்பத்திச் சொன்னது நீதானே?"

அவன் தலையசைத்தான்.

டீச்சர் அவன் சிலேட்டை வாங்கி எல்லாருக்கும் காட்டினாள். "கையெழுத்தென்றால், இப்படித்தான் முத்து முத்தா யிருக்கணும். நீங்களும் எழுதுறீங்களே?"என்று பெண்கள் மீது பாய்ந்தாள். அவன் சிலேட்டை வாங்கிக் கொண்டு பின்னால் சென்றபோது,"ராஜா,எங்கே போறே?இங்கே வா!" என்று அழைத்து, முதல் வரிசையில் அவனுக்கு இடம் ஒதுக்கினாள்.

கணக்கில் அவன் தப்புப் போடும்போதெல்லாம்,"இங்க வா ராஜா!"என்று அருகே கூப்பிட்டு,"மத்த பாடமெல்லாம் நல்லா படிக்கிற நீ இதுலே மட்டும் ஏன் தப்புப் பண்ணுறே?" என்று கேட்டு,ஒவ்வொரு கணக்காகச் சொல்லித் தருவாள். சில சமயங் களில் அவனுக்கு அவள் வீட்டிலும் கணக்குப் பாடம் நடை பெறும். மூன்று மாதத்தில் அவனுக்குக் கணக்கில் குறிப்பிடத் தக்க அபிவிருத்தி ஏற்பட்டது. கொடுத்த எட்டுக் கணக்கையும் சரியாகப் போட்டதும் கமலம் டீச்சர் பூரித்துப் போனாள். தலையசைத்துச் சிரித்துக்கொண்டே நூற்றுக்கு நூறு போட்டாள்.

கமலம் டீச்சரோடு சிநேகிதம் கூடக்கூட,அவன் நட‌த்தையில் மாறுதல் ஏற்பட்டது.இப்போதெல்லாம், சிலேட்டை எடுத்துத் தரையில் அடிப்பதில்லை; பக்கத்தில் இருக்கிறவன் தொடையில் கிள்ளுவதில்லை. வாத்தியார் படம் போட்டுக் கண்ணைத் தோண்டுவ தில்லை. இதற்கெல்லாம் நேரம் இல்லாதவன் போல் கமலம் டீச்சரோடு சுற்றிக்கொண் டிருந்தான் அவன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன் வீட்டிலிருந்து கமலம் டீச்சருக்குத் தாழம்பூப் போகும். தாழம்பூவைப் பார்த்ததும், "எனக்கு இதுன்னா ஆசைன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டுக் கொண்டே அவனைத் தன்னோடு அணைத்துக் கொள்வாள். இதமான கதகதப்பில் அவன் மருகிப் போவான். இதற்காகவே தின‌ந்தோறும் டீச்சர் வீட்டிற்குப் போகவேண்டும் போல் இருக்கும் அவனுக்கு.

ஒரு நாள், மாடியில் உட்கார்ந்திருந்தபோது நீண்ட சடையைப் பிரித்துவிட்டுக்கொண்டே கமலம் டீச்சர்,"எனக்குக் கல்யாணம் ஆகப்போவுது" என்றாள்.

அவன் மெல்ல டீச்சரை ஏறிட்டுப் பார்த்தான்.

"அதுக்கு இன்னங் கொஞ்ச நாள் இருக்கு"என்று சொல்லிக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கீழே இறங்கி வீட்டுக்கு ஓடினான். ஆனால் அன்று மாலையே தயங்கித் தயங்கிக்கொண்டு திரும்பி வந்தான். அவன் வருகை கமலத்துக்கு ஆச்சரியம் அளித்தது. வாசலுக்கு வந்து "வா ராஜா"என்று கரம்பற்றி அவனை வரவேற்றாள்.

ஒரு சனிக்கிழமை கமலம் டீச்சர் நிறையப் பூவைத்துத் தலை பின்னிக்கொண்டு பள்ளிக்கூடம் வந்திருந்தாள்.இன்னும் பள்ளிக் கூடம் தொடங்கவில்லை.

தலைமையாசிரியர் ராமசாமி ஐயர் பரபரப்போடு மூன்றாம் வகுப்புக்குச் சென்றார். ஆசியர்களெல்லாம் ஒன்றுகூடித் தணிந்த குரலில் பேசிக்கொண் டிருந்தார்கள். மாணவர்கள் பிரேயருக்குக் கூடியதும் தேசீயக் கொடி அரைக் கம்பத்தில் தாழப் பறந்தது.

ராமசாமி ஐயர் முன்னே வந்து,"மகாத்மா காந்தி நேற்றுக் காலமாகிவிட்டார்.யாரோ சுட்டுக் கொன்றுவிட்டார்கள்"என்றார். அவர் கண்களில் நீர் பெருகியது.பேச முடியவில்லை. துயரத்தோடு பின்னுக்குச் சென்றார்.

ஒரு நிமிடம் ஆழ்ந்த அமைதி நிலவியது.

"வாழ்க நீ எம்மான் காந்தி...." என்று கமலம் டீச்சர் உருக்க மாக மெல்லிய குரலில் பாடினாள். பாட்டு முடிந்ததும் தேசப் பிதா வுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

பள்ளிக்கூடம் இல்லையென்று அறிவிக்கப்பட்டது. ராஜா தயங்கிய வாறு டீச்சரிடம் சென்றான்."கொஞ்சம் இரு"என்று சொல்லிவிட்டு ராமசாமி ஐயரோடு உள்ளே சென்றாள். எட்டு வாத்தியார்களும் தேசத்துக்கு நேர்ந்த துர்ப்பாக்கிய சம்பவத்தைப் பற்றி வெகுநேரம் பேசிவிட்டுக் கலைந்தார்கள்.

கமலம் வெளியே வந்த‌ததும் அவனைப் பார்த்து முறுவலித்தாள்.

வழிநெடுகக் கொடிகள் தாழப் பறந்துகொண் டிருந்தன. திறந்த கடைகளை அவசர அவ‌சரமாக மூடிக்கொண் டிருந்தார்கள். ஹர்த்தால் போலும்.

வீடு போய்ச் சேர்ந்ததும் அவனை மாடிக்கு அழைத்துக்கொண்டு சென்றாள் கமலம் டீச்சர்.

"அடுத்த வாரத்திலிருந்து நான் வேலைக்கு வரமாட்டேன்."

"ஏங்க டீச்சர்?"

"எனக்குக் கல்யாணம்."

"எப்பங்க டீச்சர்?"

"இன்னும் ஒரு மாசம் இருக்கு."

டீச்சர் நாற்காலியிலிருந்து எழுந்து அவனை வெறித்துப் பார்த் தாள்.அவன் வெட்கத்தோடு கண்ணை மூடிக் கொண்டான்.

"இங்கே பாரு ராஜா."

அன்று வெகுநேரத்துக்குப் பிறகு ராஜா வீடு திரும்பினான். அம்மா கோபித்துக் கொண்டாள்;திட்டினாள்.ஆனால்,அவன் பதிலே சொல்லவில்லை. களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. திண்ணையில் போய்ப் படுத்தான்.

ராஜா சேர்ந்தாற்போல ஒரு வாரம் பள்ளிக்கூடம் போகவில்லை. அம்மா அவனைச் சீர்காழிக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டாள்.

அவன் பள்ளிக்கூடம் போனபோது கமலம் இல்லை.

"டீச்சர் புதன்கிழமையே போயிட்டாங்க" என்றான் சங்கரன்.

"உம்...."

"ஒன்னப்பத்தி டீச்சர் என்னை ரெண்டு வாட்டி கேட்டாங்க."

அவன் எரிச்சலோடு "சரி" என்றான்.

சில நாட்கள் சென்றன.வகுப்புப் பிரிந்தது.ஒரு செவிட்டு வாத்தியார் வந்தார்.ராஜா பின்வரிசைக்குச் செண்றான். கணக்கில் மீண்டும் பல தவறுகள் போட்டான்.

முழுப்பரிட்சை வந்தது.ராஜா எல்லோரையும் போலக் காப்பி அடித்தான்.கணக்கில் ஒன்பதாவதாகவந்தான்.

----------------------------

புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,198

Monday, September 03, 2012

நீலம் - பிரமிள்


வலையேற்றியது: அழியாச்சுடர்கள் ராம் | நேரம்: 12:00 AM | 
வகை: கதைகள், பிரமிள் 
நீலம் - பிரமிள்  


ஆர்டிஸ்டுகளின் எச்சங்களை இங்கே மோப்பம் பிடித்து வாங்கிக் கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட்க்காரர்கள் வந்து பார்ப்பார்கள்.கோழிச் சண்டையில் இறகுகள் பறக்கிற மாதிரி அவரது படங்களைச் சுற்றி விமர்சனங்களும் பறக்கும்.


அவர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார்.

சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் மற்றபடி அவருக்கு ஆர்ட்டுடன் சம்பந்தம் இல்லாத அவரது ஆபீஸ் உண்டு.குடும்பம் உண்டு. ரசிகர்கள், அதுவும் பெரிய இடத்து ரசிகர்கள் வீசும் ரசனைகளை அசை போட்டுப் போட்டு அவருக்குத் தலை கவிழ்ந்துவிட்டது. அப்படிப் பாரம் ! அவர் பஸ் ஏறப் பிடிக்கும் குறுக்கு வழிகளின் மனித எச்சமும் நடுவே மானங்காணியாக மலரும் காட்டுச் செடிகளும் அவரது கண்களுக்குப்படுவதில்லை

ஆபீஸிலிருந்து லேட்டாகத் திரும்பிய ஒரு நாள் மாலை பஸ்ஸில் ஏறிய அவர், தமது பஸ் ஸ்டாப்பிலிரிந்து இரண்டு ஸ்டேஜுகள் கடந்து போய் இறங்கி விட்டார். இதற்குப் புற உலகக் காரணமாக, பஸ்ஸில் ஏறியவன் இறங்க முடியாத நெரிசல். அக உலகக் காரணமும் ஒன்று உண்டு. சமீபத்தில் டிவியில் அவர் பார்த்த ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம் ஒன்றைப் பக்கத்துக்கு சீட்காரர் வைத்திருந்ததிலிருந்து பிடித்த சர்ச்சை.

கதை, கவிதை போன்ற எந்த மனித சிருஷ்டியையும் கூட கம்ப்யூட்டர்கள் மனிதனை விடச் சிறப்பாகக் கையாள முடியும் என்ற இடத்தில் சூடு பிடித்த சர்ச்சை அது. "அந்நிலையில் மனிதன் என்கிற நீ என்ன?" என்பது கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி. நமது ஆர்டிஸ்ட்டோ, என்ன இருந்தாலும் கம்ப்யூட்டரினால் பெயிண்டிங் செய்ய முடியும் என்று சொல்லப்படவில்லை எனச் சுற்றி சுற்றி அழுத்தினார்.

"பெயிண்டிங் சிற்பம், இசை எல்லாமே கம்ப்யூட்டரால் முடியும். ஜப்பானில் கம்ப்யூட்டர் கார்களை மெனுபாக்செர் பண்ணுகிறது" என்று உறுமினார் பக்கத்துக்கு சீட்காரர். முக்குக் கண்ணாடி வட்டத்துக்குள் அவரது கண்கள், போகப் போகப் பெரிதாகிக் கொண்டிருந்தன. அவரது உறுமலுடன் கண்ணாடியில் ஏதோ ஒரு வட்டமான சிறு ஒளி, பஸ் கூட்டத்தின் இடுக்குகளூடே ஊடுருவிப் பிரதிபலித்தது.

"ஆனால் அதோ அந்த நிலவின் அழகை மௌனமாகத் தனக்குள் உணர மனிதனால் முடியும். கம்ப்யூட்டரால் முடியாது" என்றார் திருவாளர் பக்கத்துக்கு சீட்காரர்

"டெர்மினஸ்" என்று சேர்த்துக் கொண்டார்.

பஸ்சிலிருந்து பொலபொலவென்று கூட்டம் உதிர்ந்தது. ஆர்டிஸ்டும் உதிர்ந்தார். பக்கத்துக்கு சீட்காரரைக் காணோம்.

எங்கோ இன்னொரு கிரகத்தில் நிற்கும் உணர்வு தீடீரென நமது ஆர்ட்டிஸ்டுக்குத் தோன்றிற்று. எங்கோ, என்றோ, எவனோ, தான் என்ற ஒரு இடைவெட்டு மனதில் ஒரு மௌனக் கீறாக ஓடிற்று.

கலைந்து கொண்டிருந்த மனிதர்களது முகங்கள் மீது,மின்சார கம்பம் ஒன்றின் ஒளிச்சீற்றம். இருண்டு கருத்த முகங்களில் கண்ணாடிச் சில்லுகள் கட்டமிட்டு மின்னின.

குடில்களாகவும், சீரற்ற சிமிந்திப் பொந்துகளாகவும் தெரு பின் வாங்க, நடக்க ஆரம்பித்தார். திடீரென எதிரே உலகு வெளித்தது.வானின் பிரம்மாண்டமான முகில்கள் தமக்குள் புதையுண்ட பெரிய மர்மம் ஒன்றினை, வெள்ளியும் பாதரசமுமாக உலகுக்குத் தெரிவித்தபடி நகர்ந்து கொண்டிருந்தன. எட்டோணாத தொலை தூரத்தில் ஒரு கிராமீயக் குரல், இயற்கையின் மொழியற்ற மழலை போன்று வெற்றோலியாய்க் கேட்டு மறைந்தது.

திடீரென, அந்தக் குரலுக்குப் பதிலாக, அவருக்குப் பின்புறம் முதுகு சில்லிட, "கூ" என்றது இன்னொரு குரல். அதன் அமானுஷ்யத்தில் ஒரு கணம் அர்த்தமற்ற மரண பயம்.அவர் திடுக்கிட்டுத் திரும்பினார். நிலவு வெளிச்சத்தில் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். சுமார் பதினைந்து பதினாறு மதிக்கத்தக்க கிராமத்துப் பையன்.

அவரை அவன் பேசவிடவில்லை. " இந்நேரம், இந்நேரம் ... இன்னும் கொஞ்சம் தூரம்..." என்றான், அவரை முந்தித் தன்னைப் பின் தொடர அழைத்தபடி நடந்த அவன். அவரது மனதில் ஏதேதோ எல்லாம் எழுமுன், 'தோ" என்று ஒரு இருண்ட பெரிய பள்ளத்தைக் காட்டினான். திட்டுத் திட்டாக மின்னிய நிலவொளியில் இருள் மாறி, பாசி படர்ந்த குளமாயிற்று. குளத்தைக் காட்டிய சிறுவன் சரசரவென்று அதற்குள் இறங்கினான். இறங்கியவன் குளத்தினுள்ளேயே மூழ்கி மறைந்தான்.

நமது ஆர்டிஸ்டுக்கு, அந்த ஒரு கணம், தன் முன் தோன்றி மறைந்தது அமானுஷ்யமான ஏதோ ஒரு உயிர் வடிவம் என்றே சிறுவனின் தோற்றமும் மறைவும் எண்ண வைத்தன.

அதற்குள் பையன் குளத்திலிருந்து ஈரம் சொட்டச் சொட்டக் கிளம்பிக் கரையேறி, கையில் எதையோ கொண்டு வந்தான்.

அது ஒரு நீல வண்ண ஜாலம். அப்போது தான் விரிந்து கொண்டு இருந்தது. அந்த நீலோத்பலம். பத்திரமாக நீட்டிய கையிலிருந்து பெற்று கொண்டார் அதை.

"நீலோத்பலம், அதுவும் ராவானதும், நீருக்கடியில்தான் பூக்கும்.அதன் அழகை யார் கண்டது?" யாரோ, எங்கோ,என்றோ அவரது ஞாபகங்களின் விளிம்பில் நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். குளத்தின் எதிர்க்கரையில், பையனை ஆர்டிஸ்ட் மீது ஏவி விட்டு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துக்கு சீட்காரரா?

ஆர்டிஸ்டின் கண்கள் பையனின் முகத்துக்குத் திரும்பின. ஈரம் பட்ட சிறுவனின் முகத்தில் உக்ரமாக விழுந்த சந்திர தீபத்தின் வெளிச்சம், அவனது பெரிய கண்களுக்கும், நெற்றியிலிரிந்து பள்ளமற்று ஓடிய நாசிக்கும், ஆயிரமாயிரம் வருஷங்களாக இயற்கையினால் அதி கவனத்துடன் செதுக்கப்பட்ட இன்னொரு முகத்தின் சாயலைத் தந்து கொண்டிருந்தன.

தம்மை மீறிய மரியாதையுடன், " யார் நீ?" என்றார் ஆர்டிஸ்ட்.

அவன் பதில் சொல்லவில்லை. தூரத்தே மொழியற்று ஒலித்த குரல், ஒலியலைகளாக உருப்பெற்று, 'கிஸ்ணா"என்று கேட்டது.

பையன் பதிலுக்குக் 'கூ' என்றபடி, நிலவின் பரந்த வெளியினடே தன்னை அழைத்த குரலை நோக்கி ஓடினான். கையில் நீலோத்பலம் அதற்குள் ஆகாயமாகத் தனது நீலச்சுடர்களை மலர்த்தி விட்டது.
----------------------
அம்ருதா பதிப்பகம் 2009 
தட்டச்சு உதவி: மணிகண்டன்
Share

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
2 கருத்துகள்:

கோமதி அரசு on 12 ஆகஸ்ட், 2012 10:00 am சொன்னது…
கதை அருமையாக இருக்கிறது.
நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய நீங்கள் கொடுப்பது பாராட்டுக்குரியது.
மகிழ்ச்சி தொடர்ந்து வருகிறேன்

rajasundararajan on 13 ஆகஸ்ட், 2012 11:14 am சொன்னது…
இதில் வரும் சிறுவன் ஜித்து கிருஷ்ணமூர்த்தி!